சமவசரணச்சருக்கம்617


 

இங்கு ஞானப்பிராமணஞ் சுருக்கிச் சொல்லப்பட்டது. இன்னும் விரிவாக
அறிய   வேண்டுமானால் ஞானார்ணவ முதலான கிரந்தாந்தரங்களைப்
பார்த்துக் கொள்க.                                      (277)

 1325. அராகாதி மான்க ளாத்த ரல்லவர் நல்ல ரென்றும்
      விராகாதி யல்ல மார்க்கம் விகற்பத்தை விடுத லென்று
      முரோகாதி யோம்ப லின்றி யுயிர்க்கொலை தரும மென்றும்
      வராகாதிப் பிறவி யானே வையத்துக் கிறைவ னென்றும்.

      (இ-ள்.)    அராகாதிமான்கள்   -    ராகத்வேஷ  பரிணமன
புத்தியையுடையவர்கள்,   ஆத்தர் - கடவுளாகிய முக்கியர்களென்றும்,
அல்லவர் - பாபத்தொழிலைப் புரியுமவர்கள், நல்லரென்றும் - நற்குண
முடையவர்களென்றும், விராகாதியல்ல மார்க்கம் - வைராக்கியபாவனை
யில்லாதராக    மார்க்கமே,    விகற்பத்தை - ஸம்ஸார விகல்பத்தை,
விடுதலென்றும்    -   விட்டு நீக்குவதென்றும், உரோகாதி - ரோகம்
முதலாகிய   பீடைகளை,     ஓம்பலின்றி - பரிகரித்து உபசரிக்காமல்,
உயிர்க்கொலை    -   ஜீவஹிம்சை   பண்ணுதலே, தருமமென்றும் -
தர்மமாகுமென்றும்,   காதி - காதி  கர்மத்தினுடைய வசனாகி, வரா -
சுழன்று  சுழன்று   வருகின்ற,   பிறவியானே  -  ஜனனமரணமாகிய
பிறப்புடையவனே, வையத்துக்கு - இவ்வுலகிற்கு, இறைவனென்றும் -
நாதனென்றும், எ-று.

     இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.                 (278)

 1326. விகாரமில் லொருவன் செய்கை யுலகத்தில் விகார மென்று
      மவாவொடு மனையி னீங்கா தவரைமா தவர்க ளென்றுந்
      தகாதன யாவுஞ் செய்ய வல்லவர் தலைவ ரென்றுந்
      தொகாவிரி பொருள்க ளில்லை சூனிய மல்ல தென்றும்.

     (இ-ள்.)   விகாரமில்   -  விகாரகுணங்களில்லாத, ஒருவன் -
ஒருவனுடைய,    செய்கை   -    செயல்களானவை,  உலகத்தில் -
லோகத்திலே, விகாரமென்றும் - விகாரமானதென்றும், அவாவொடு -
ராகாதியோடு கூடி, மனையின் இல்வாழ்க்கையினின்றும், நீங்காதவரை
- நீங்கி நிஸ்ஸங்கத்துவம் பொருந்தாதவர்களை, மாதவர்களென்றும் -
மஹா      தபஸ்விகளென்றும்,    தகாதனயாவும்     -     தகாத
குரூரகிருத்தியங்களாகிய எல்லா ஹிம்ஸாதிகளையும், செய்ய வல்லவர்
- செய்யும்படியான வல்லமையுடைய புருஷர்கள்,  தலைவரென்றும் -
நாதர்களென்றும், சூன்யமல்லது - ஸர்வ சூன்யமல்லாமல், தொகாவிரி
- ஸாமான்ய    விசேஷமாகிய,  பொருள்கள் - ஜீவாதி பொருள்கள்,
இல்லை என்றும் - உலகத்தில் இல்லையென்றும், எ-று.

     இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.                 (279)