64மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

அலங்கரித்து,  இலங்கும்  -  விளங்கும்,  நல்லார் - ஸ்த்ரீமார்களை,
வடிவினால் - வடிவத்தினால், குழைய - மனம் தளர்ச்சி யடையும்படி,
வாங்கும்  -  அவர்  மனதை கிரகிக்கும், தழல் - பிரகாசம், உறும் -
அடைந்த, தன்மைத்து - தன்மையையுடையது, எ-று. (133)

 134. ஆங்கவ னுருவங் காணா வருந்தவன் சயந்த னந்தோ
     வீங்கிய தவத்தி னான்மே லிவ்வுரு வாக வென்னா
     நீங்கிய காட்சித் தாய நிதானத்தை நிறைய நின்றா
     னோங்கிய வுலகம் வேண்டா துமிகொண்ட வொருவ னொத்தான்.

    (இ-ள்.) ஆங்கு - அவ்விடத்தில், அவன் - அத்தரணேந்திரனது,
உருவம் - வடிவத்தை, காணா - கண்டு, அரும் - அரிதாகிய,தவன் -
தபசை யுடையவனாகிய, சயந்தன் - ஜயந்தனென்னும் முனி,அந்தோ -
ஐயோ!,   நீங்கிய   காட்சித்தாய  -  நீங்கிய காக்ஷியையுடையதாகிய
(அதாவது :   சம்மியக்    தரிசனமல்லாத),   நிதானத்தை  - நிதான
சல்லியத்தில்,  நிறைய நின்றான் - நிறையும்படி நின்றவனாய், வீங்கிய
- பெரிதாகிய,  தவத்தினால்  - யான் பண்ணிய தபத்தினால், மேல் -
மறு சன்மத்தில், இவ்வுருவு - இப்படிப்பட்ட உருவம், ஆக - எனக்கு
உண்டாவதாக,  என்னா  -   என்றுநினைத்து,  ஓங்கிய - மேலாகிய,
உலகம் -  உலகத்தை, வேண்டாது  - வேண்டாமல், உமி - உமியை,
கொண்ட -  ஏற்றுக்கொண்ட,  ஒருவன்  -   ஒருவனை, ஒத்தான் -
நிகர்த்தான், எ-று. (134)

 135. அருந்தவந் தாங்கி மேரு வனையவர்க் கேலு மாசை
     துரும்பிடைத் தோன்று மேனுந் துகளினுஞ் சிறிய ராவ
     ரருந்தவ னிவனிற் கண்டா மாசையில் லாமை யன்றோ
     பெருந்தவ மாத லன்றேற் பிறவிவித் துலர்த்த லன்றோ.

   (இ-ள்.) அருந்தவம்  -  அரிதாகிய  தவத்தை,  தாங்கி - தரித்து,
(அதனாலே),  மேரு  அனையவர்க்கு  -  மஹாமேரு பர்வதத்துக்குச்
சமமாகிய பெருமையை அடைந்தவர்க்கும், ஏலும் - இசையும், ஆசை
-    ஆசையானது,   துரும்பிடை   -    ஒரு   துரும்பினிடத்தில்,
தோன்றுமேனும் -   உண்டாகுமானாலும், (அவர்கள்)   துகளினும் -
சிறுதுகளைப்  பார்க்கிலும்,  சிறியராவர் - அற்பராவார்கள், (இதனை)
அரும்   -  அரிய,   தவனிவனில்  -  தவத்தையுடைய  இச்சயந்த
முனியிடத்தில், கண்டாம் - நாம் பார்த்தோம், பெரும் - பெரியதாகிய,
தவமாதல்     -     தபமாவது,     ஆசையில்லாமையன்றோ    -
பரத்திரவியங்களில்   விஷய   வாஞ்சையில்லாத   தன்மையல்லவா?,
அன்றேல் - அப்படி இல்லாமல் (ஆசை உண்டானால்), (அது) பிறவி
- ஸம்ஸாரப் பிறப்புக்கு, வித்து - விதையை, உலர்த்தல்  அன்றோ -
உலர்த்திச்  சித்தப்படுத்துவதற்குச்  சமானமல்லவோ?, எ-று.


  வித்தை, விதைப்பதற்கு உலர்த்திப் பக்குவப்படுத்தல் இயற்கை. (135)