முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
115

சாதனம் வேறு ஒன்று இல்லை,’ என்பதூஉம் இப்பொருட்டு. 1எங்கும் நிறைந்த ஓடம் ஆகையால், இக்கரையும் அக்கரையும் ஒன்றாய் நின்று அவ்வருகு கடத்தும் என்பது பெறுதும்.

(3)

15

        இல்லதும் உள்ளதும், அல்லது அவன்உரு
        எல்லையில் அந்நலம், புல்குபற்று அற்றே.

    பொ-ரை : ‘இறைவனுடைய வடிவம், அழிந்து போகின்ற உடலும் அழியாததான உயிருமாகிய இவற்றின் தன்மையினையுடையது அன்று; எல்லையில்லாத ஆனந்தமயமானது; ஆதலால், வெளிப்பொருள்களிலுள்ள ஆசையினை நீக்கி அவனைப் பற்று, 2என்கிறார்.

    வி-கு : இல்லது, உள்ளது என்பன வினையாலணையும் பெயர்கள். அல்லது - முற்று. ‘தோற்றக் கேடுகளின்மையின் நித்தமாய், நோன்மையால் தன்னை ஒன்றுங் கலத்தலின்மையின் தூய்தாய், தான் எல்லாவற்றையுங் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒரு தன்மைத்தாதல் பற்றி, அதனைச் ‘செம்பொருள்’ என்றார்; மேல், ‘மெய்ப்பொருள்’ என்றும், ‘உள்ளது’ என்றும் கூறியதூஉம் இதுபற்றியெனவுணர்க,’ என்ற பரிமேலழகருரை, ‘அல்லது அவனுரு எல்லையிலந்நலம்’ என்பதனோடு ஒப்பு நோக்கல் தகும். (குறள். மெய்யு. 8. பரி.)

 

1. ‘விஷ்ணுவாகிற ஓடம்’ என்றார் மேல் ; ‘விஷ்ணு’ என்பதற்கு எங்கும்
  நிறைந்தவன் என்பது பொருளாதலின், ஈண்டு ‘எங்கும் நிறைந்த ஓடம்
  ஆகையாலே’ என்கிறார். இவ்விடத்தில் ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
  நீந்தார், இறைவ னடிசேரா தார்,’ என்ற திருக்குறள் நினைத்தல் தகும்.

2. ‘இதுகாறும், ‘வீடுமின்’, ‘உன்னுமின்’, ‘சேர்மின்’ என்று பலரைக் குறித்துப்
  பொதுவில் உபதேசம் செய்து வந்த ஆழ்வார், இங்குப் ‘புல்கு’ என்று
  ஒருமையில் அருளிச்செய்கிறார்; காரணம் என்னை?’ எனின், உபதேசம்
  கேட்டு வந்த பலரும், தங்களுக்குத் தலைவனாக ஒருவனை நியமிக்க,
  நியமிக்கப்பட்ட அவன் ஆழ்வார் முன்னிலையில் அண்மையில் வந்து
  நிற்க, எல்லார்க்குமாக அவனை நோக்கி அருளிச்செய்கின்றார் எனக்
  கோடல் அமையும். மேல் வருகின்ற ஒருமைகட்கும் காரணம் இங்ஙனமே
  கொள்க. உரைகாரரும் ‘புல்கு’ என்பதனைத் தொகுதி ஒருமை என்பர்.
  ‘முன் போற்றுவம், செய்தும் என உளப்பாட்டுத் தன்மைப்பன்மை
  முற்றாகவும், பின்னர்க் கூற என முன்னிலையேவலொருமையாகவும்
  கூறினமையின், வழிநூலும் சார்புநூலும் செய்வோர் பலர் குழீஇ
  ஒருவர்க்கொருவர் கூறுங்கூற்றாக, இச்சூத்திரம் செய்யப்பட்டதென்க.’
  (நன். சூத். 9.) என்னும் சங்கர நமச்சிவாயருரை ஈண்டு ஒப்பு நோக்குக.