முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
192

1

1‘நெறிவாசல் தானேயாய்நின்றானை’ என்றும், 2‘விழிக்குங் கண்ணிலேன் நின்கண் மற்றல்லால்’ என்றும், 3‘வாழுஞ் சோம்பர்’ என்றும் இப்படிகளிலே அன்றோ இவர்கள் கோஷ்டியில் வார்த்தைகளும் இருக்கும்படி? இனி ‘விதியினம்’ என்பதனை ‘விதியினன்’ என்றதன் திரிபாகக் கொண்டு, அதற்கு, ‘பாபத்தையுடையேனான நான்’ என்று பொருள் கூறி, நான் அகல்வதுவோ - ‘பாவத்தையுடைய நான் அகன்றே போமதுவோ?’ என்று கூறலும் ஒன்று. விதி - பாபம். ‘ஆயின், மூன்றாமடியில் ‘முழுவினையேன்’ என்றவள் ஈண்டும் ‘பாவியேன்’ என்று கூறல், கூறியது கூறலாகாதோ?’ எனின் ஆகாது; ‘தீயவினைகளைச் செய்த தீவினையேன்’ என்கிறாள். 4‘பாவமே செய்து பாவியானேன் என்றார் மங்கை மன்னனும்.

(2)

 36

        விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்!
        மதியினால் குறள்மாணாய் உலகுஇரந்த கள்வர்க்கு
        மதியிலேன் வல்வினையே மாளாதோ என்றுஒருத்தி
        மதிஎல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே.


    பொ-ரை :
நல்வினையினால் பெண் அன்னங்களைச் சேர்ந்திருக்கிற மெல்லிய நடையினையுடைய அன்னங்காள், அறிவினால் குறுகிய வடிவையுடைய பிரமசாரியாகி உலகத்தினை யாசித்த வஞ்சனையுடையவருக்கு, ‘ஒரு பெண்ணானவள் அறிவில்லாத தன்னுடைய கொடிய வினைகள்தாம் அழியாதனவோ என்று கூறி, அறிவு எல்லாம் அடியோடு கலங்கி மயங்காநின்றாள்’ என்று கூறுங்கள்.

 

1. முதல் திருவந்தாதி, 4.

2. பெரியாழ்வார் திருமொழி, 5. 1 : 2.

3. திருமாலை, 38.

4. பெரிய திருமொழி, 1, 9 : 9.

      இப்பாசுரத்தில் ‘முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே’
  என்பதற்குக் கூறிய பொருள்கள் மூன்றனுள், முதற் பொருளால், இழந்த கால
  விஷய சோகமும், பேற்றில் விரைவும் போதரும். இரண்டாவது பொருளால்,
  ‘அவன் ஒருவனே ரக்ஷகன்; அவனே பற்றுக்கோடு’ என்னும் மனத்தின்
  உறுதி போதரும். மூன்றாவது பொருளால், கைம்முதல் இல்லாமை,
  பற்றுக்கோடு வேறு இன்மை. இவைகள் போதரும்.