முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
247

திருப்பாற்கடலினின்றும் இவ்வருகே போந்து கிட்டினபடியை அருளிச்செய்தாராவர்.

    மா மாயவனே - ஆய்க்குலத்திலே வந்து பிறந்து, அவர்கள் தொட்ட பொருளே தாரகமாய், அதுதான் களவு கண்டு உண்ணும் படியாய், அதுதான் தலைக்கட்டமாட்டாதே வாயது கையதுவாக அகப்பட்டுக் கட்டுண்டு அடியுண்டு நிற்கும் நிலை. இவ்வெளிமைக்கு அடி சொல்லுகிறார் மேல் : மாதவா - அவளுடைய சேர்த்தி. சினை ஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் - கிளைகளோடு கிளைகள் நெருங்கித் தழைத்து நினைத்தபடி இலக்குக் குறிக்க ஒண்ணாதவாறு நின்ற மராமரங்கள் ஏழையும் எய்தவனே! இது, மகாராஜரை நம்பச் செய்து காரியஞ்செய்தபடி. இதனால், அடியார்கள் தன்னுடைய காத்தலில் ஐயங்கொள்வார்களாயின், அவ்வையத்தை நீக்கிக் காக்கின்றவன் என்பதனைத் தெரிவித்தவாறு. சிரீதரா - மராமரங்கள் எய்கைக்கு இலக்குக் குறித்து நின்ற போதைய வீரலட்சுமியைக் குறிக்கிறார். இனையாய்-இவ்விதமான குணங்களையும் செயல்களையுமுடையவனே. இனைய பெயரினாய்-அவற்றிற்கு வாசகங்களான திருப்பெயர்களை உடையவனே. என்று நைவன் - ‘காணவேண்டும், கேட்கவேண்டும்’ என்னாதே உருகுகின்றேன். அடியேனே - யார் உடைமை அழிகிறது? இவ்வுயிர் ஏதேனும் தனக்குத்தானே உரியதாகி அழிகிறதோ, பிறர்க்கு உரிமைப்பட்டு அழிகிறதோ? உடையவர்கள் வேண்டுமாகில் தங்கள் பொருளை நோக்கிக்கொள்ளுகிறார்கள் என்பார், ‘அடியேனே’ என்கிறார், உன்னால் இரட்சிக்க ஒண்ணாமல் அழிகிறதோ? என்னால் இரட்சிக்கலாய் அழிகிறதோ?

(6)

51

        அடியேன் சிறிய ஞானத்தன்
            அறிதல் ஆர்க்கும் அரியானைக்
        கடிசேர் தண்ணம் துழாய்க்கண்ணி
            புனைந்தான் தன்னைக் கண்ணனைச்
        செடியார் ஆக்கை அடியாரைச்
            சேர்தல் தீர்க்கும் திருமாலை
        அடியேன் காண்பான் அலற்றுவன்
            இதனின் மிக்கோர் அயர்வுண்டே!

 

1. ‘உன்னால் இரட்சிக்க ஒண்ணாமல் அழிகிறதோ?’ என்பது, மேல் ‘உன்னைப்
  பார்த்தல், என்னைப் பார்த்தல் செய்ய வேண்டாவோ?’ என்றதன் கருத்து.