முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

நான்காந்திருவாய்மொழி - பா. 3

101

படும்படி செய்கின்றீரே!’ என்பாள், ‘எரிஅணை அரக்கும் மெழுகும்’ என்கிறாள். இவள் நிலை இது.

    இரக்கம் எழீர் -‘நீரும் இவளைப் போன்று உருகவேண்டும் என்று வளைக்கிறோமோ? நொந்தார் பக்கல் செய்யும் அருளும் செய்கிலீர். இரக்க மனத்தையுடையள் ஆகாநின்றாள் இவள்; நீர் இரக்கம் எழுகின்றிலீர்; நீர் இரங்காவிட்டால் உம்முடைய நெஞ்சைப் போன்று இருப்பது ஒரு நெஞ்சை இவளுக்குக் கொடுத்தல் ஆகாதோ!’ என்கிறாள். இதற்கு என்செய்கேன் - உம்முடைய இரக்கம் ஒழிய ஏதேனும் வேறு உபாயத்தால் பெறத்தக்கதோ இப்பேறு? இனி, உம்மை இரங்கும்படி செய்யவோ? அன்றி, இவளை இரங்காமற் செய்யவோ? யாது  செய்வேன்?’ என்பாள், ‘என் செய்கேன்?’ என்கிறாள் எனலுமாம். அரக்கன் இலங்கை செற்றீருக்கு -‘ஒரு காதலிக்கு உதவினவன் நமக்கு உதவானோ?’ என்று ஈடுபடாநின்றான். 1புழுக்குறித்தது எழுத்தானாற்போலே ஒன்று வாய்த்ததைக் கொண்டு 2‘அது அந்யார்த்தம்’ என்று இராமல் நோவுபடாநின்றாள்’ என்கிறாள். ‘உமக்கு இரக்கம் இன்றியே ஒழிந்தால், 3இவள் இரங்குவது ஒரு செயலைச் செய்து வைக்க வேண்டுமோ?’ என்பது உட்கோள்.

(3)

_____________________________________________________________

1. ‘மானத்து வண்டல் உழ ஒர் எழுத்தின் வடிவு உற்ற சீர் மான’ என்றார், திவ்வியகவி
  ஐயங்கார்.

2. அந்யார்த்தம் - வேறொன்றற்காகச் செய்யப்பட்டது; அல்லது, பிறருக்காகச்
  செய்யப்பட்டது, இவ்விடத்து,

  ‘உன்னைமீட் பான்பொருட்டு உவரி தூர்த்துஒளிர்
  மின்னைமீட் டுறுபடை யரக்கர் வேரறப்
  பின்னைமீட் டுறுபகை கடந்திலேன்; பிழை
  என்னைமீட் பான்பொருட்டு இலங்கை எய்தினேன்’

(கம்பரா. மீட். 63)

  ‘சீதையைக் குறித்த தேயோ தேவரைத் தீமை செய்த
  பேதையைக் கொல்வன் என்று பேணிய விரதப் பெற்றி
  வேதியர் அபய மென்றார்க்கு அன்றுநான் விரித்துச் சொன்ன
  காதையைக் குறித்து நின்ற அவ்வுரை கடக்க லாமோ?’

(கம்பரா. விபீட. 118.)

  என்னும் செய்யுள்களை ஒப்பு நோக்கல் தகும்.

3. ‘இவள் இரங்குவதொரு செயல்’ என்றது, இலங்கையை அழித்தது.