முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

183

192

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

183

        திரிவிக்கிரமன் செந்தாமரைக்கண்
            எம்மான்என் செங்கனிவாய்
        உருவில் பொலிந்த வெள்ளைப் பளிங்கு
            நிறத்தனன் என்றுஎன்று உள்ளிப்
        பரவிப் பணிந்து பல்ஊழி
            ஊழி நின்பாத பங்கயமே
        மருவித்தொழும் மனமே தந்தாய்
            வல்லை காண்என் வாமனனே!

    பொ-ரை : ‘மூன்று அடிகளாலே உலகங்களை எல்லாம் அளந்தவன், செந்தாமரை போன்ற திருக்கண்களையுடைய எம்மான், சிவந்த கனி போன்ற திருவாயிலே அழகிய வெண்மையான ஸ்படிகம் போன்ற நிறம் பொருந்திய பற்களை உடையவன்’ என்று என்று காலமுள்ள வரையிலும் நினைத்து வணங்கித் துதித்துப் பொருந்தித் தொழும்படியான மனத்தினைத் தந்தாய்; என் வாமனனே! நீ ஆற்றலையுடையாய்’ என்றவாறு.

    வி -கு : ‘என்று என்று உள்ளிப் பரவிப் பணிந்து மருவித் தொழும் மனம்’ என முடிக்க. ‘வெள்ளைப்பளிங்கு நிறத்தனன்’ என்பதனை ‘வெள்ளை நிறத்துப் பளிங்கினன்’ என விகுதி பிரித்துக் கூட்டுக. பளிங்கு என்றது, பளிங்கு போன்ற பற்களை. வல்லை - முன்னிலை முற்று. காண் - முன்னிலையசை.

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘உன்னுடைய குணங்களை நினைத்தல் முன்னாகத் துதித்தலையும் வணங்குதலையும் செய்துகொண்டு உன்னை அனுபவிக்கும் இதுவே பிரயோஜனமாய் இருக்கும் மனத்தை எனக்குத் தந்தாய்’ என்கிறார்.

    திரிவிக்கிரமன் - மூன்று அடிகளாலே எல்லா உலகங்களையும் தன் காற்கீழே இட்டிக்கொண்டவன். செந்தாமரைக்கண் எம்மான் - நோக்காலே என்னைத் தன் காற்கீழே இட்டுக் கொண்டவன். என் செங்கனி வாய் உருவின் பொலிந்த வெள்ளைப் பளிங்கு நிறத்தனன் -என்னைத் தனக்கே உரியவன் ஆக்குகையாலே சிவந்து கனிந்த திரு அதரத்தின் 2உருவிலே பொலிந்த, பரிசுத்தமான ஸ்படிகம் போலே இருக்கிற திருமுத்து நிரையினுடைய நிறத்தையுடையவன். இதனால்,

_____________________________________________________________

1. ‘மருவித் தொழும் மனமே தந்தாய்’ என்றதனை நோக்கி, ‘உன்னை அனுபவிக்குமிதுவே
  பிரயோஜனமாய் இருக்கும் மனத்தை’ என்கிறார்.

2. உரு - அழகு; ஈண்டு நிறத்தின் அழகைக் குறிக்க வந்தது. ‘சிவந்த நிறத்தாலே’ என்றபடி.
  பொலிந்த - பரபாகத்தாலே நிறைந்த. பரபாகம் - (வர்ண உத்கர்ஷம்) நிறத்தின் சிறப்பு.
  ‘திருமுத்து’ என்றது, பற்களை.