முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

196

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

விரகு காண்கின்றிலேன். நான் ஓர் உபகாரம் கொள்ளாதொழிதல், நீ குறைவாளனாதல் செய்யப்பெற்றிலேன்; நிறைவாளனாக இருக்கிற உனக்கு நான் எத்தைதச் செய்வேன்?’ என்பார், ‘ஸ்ரீதரனே, உனக்கு என் செய்வேன்?’ என்கிறார்,                        

(8)

185

        சிரீதரன் செய்ய தாமரைக் கண்ணன்,
            என்றுஎன்று இராப்பகல்வாய்
        வெரீஇ, அலமந்து கண்கள் நீர்மல்கி
            வெவ்வுயிர்த்து உயிர்த்து
        மரீஇய தீவினை  மாள, இன்பம் வளர,
            வைகல் வைகல்
        இரீஇ, உன்னை என்னுள் வைத்தனை;
            என்இருடீ கேசனே!

    பொ-ரை : ‘என்னுடைய இருடீகேசனே! ‘ஸ்ரீதரன், செந்தாமரைக்கண்ணன்’ என்று இடைவிடாது இரவும் பகலும் வாயால் சொல்லிக்கொண்டு மனம் சுழன்று கண்கள் நீர் நிறைந்து வெப்பத்தோடு பெருமூச்சு எறிந்து, பொருந்திய கொடிய பாவங்களெல்லாம் நீங்கும்படியாகவும் பேரின்பம் மேலும் மேலும் வளரும்படியாகவும் கழிந்துகொண்டே செல்கின்ற நாள்தோறும் உன்னை என் மனத்தில் இருத்தி வைத்தனை,’ என்கிறார்.

    வி-கு : வெருவி, மருவிய, இருத்தி என்னும் சொற்கள், விகாரப்பட்டு அளபெடுத்தன. ‘என்று என்று, வெருவி, அலமந்து, மல்கி, உயிர்த்து’ என்னும் எச்சங்களை ‘மருவிய’ என்னும் பெயரெச்சத்துடன் முடிக்க. ‘மாள வளர வைத்தனை’ என்றும், ‘இரீஇ வைத்தனை’ என்றும் முடிக்க. இருடீகேசன் - இந்திரியங்களை நியமிக்கின்றவன்; ஹ்ருஷீகம் - இந்திரியங்கள்; ஈசன் - நியமிக்கிறவன். இது வடமொழிப் பெயர். ‘பொறிவாயில் ஐந்தவித்தான்’ (திருக்குறள்) தமிழ்ப்பெயர்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘ஆடி ஆடி’யிற் பிறந்த துன்பம் எல்லாம் யான் மறந்து மிகவும் பிரீதன் ஆகும்படி பண்ணி,

_____________________________________________________________

1. இப்பாசுரத்திற்கு அவதாரிகை இரண்டு வகையில் அருளிச் செய்கிறார். முன்னையது,
  பட்டர் நிர்வாஹத்தைப் பற்றியது. பின்னையது, முன்புள்ள முதலிகள் நிர்வாஹத்தைப்
  பற்றியது. இப்பாசுரத்தில் ‘மரீஇய தீவினை மாள’ என்றதனை நோக்கி, ‘ஆடியாடியிற்
  பிறந்த துன்பம் எல்லாம் யான் மறந்து’ என்கிறார். ‘இன்பம் வளர’ என்றதனை நோக்கிப்
  ‘பிரீதனாகும்படி பண்ணி’ என்கிறார். ‘இருடீகேசன்’ என்றதனை நோக்கி,‘இந்திரியங்களைத்
  தானிட்ட வழக்காக்கினான்’ என்கிறார். ‘இராப்பகல் வாய் வெரீஇ அலமந்து கண்கள் நீர்
  மல்கி வெவ்வுயிர்த்துயிர்த்து, மரீஇய தீவினை மாள இன்பம் வளர வைகல் வைகல் இரீஇ
  உன்னை என்னுள் வைத்தனை’ என்னும் முழுப்பகுதியினையும் நோக்கிப் ‘பக்தி
  முன்னாத’ என்று தொடங்கும் அவதாரிகை எழுகின்றது.