முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1 2 8

48

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

128

        பள்ளி ஆலிலை ஏழுலகும் கொள்ளும்
        வள்ளல் வல்வ யிற்றுப் பெருமான்
        உள்உள் ஆர்அறி வார்அ வன்தன்
        கள்ள மாய மனக்க ருத்தே?

    பொ - ரை : ‘ஆலந்தளிராகிய படுக்கையில் சயனித்திருக்கிற வள்ளல் தன்மையும் வலிமையும் பொருந்திய வயிற்றையுடைய பெருமான்; ஒருவர்க்கும் தோன்றாத ஆச்சரியமான, உள்ளே உள்ளே செல்லுகின்ற, அவனுடைய மனத்தின் எண்ணத்தை அறிய வல்லவர் எவர்தாம்? ஒருவர் இலர்,’ என்றவாறு.

    வி - கு : ‘கொள்ளும்’ என்னும் எச்சத்தை ‘வயிறு’ என்னும் பெயருடன் முடிக்க. ‘வள்ளல், வல்’ இவ்விரண்டும், வயிற்றுக்கு அடைமொழி. கள்ளம் - ஒருவருக்கு அறிய முடியாத தன்மை. மாயம் - ஆச்சரியம். ‘அறிவார் ஆர்?’ என்ற வினா, இன்மை குறித்து நின்றது.

    ஈடு : ஏழாம் பாட்டு, 1‘அகடிதகடநா சாமர்த்தியத்தாலும் இவனே இறைவன்,’ என்கிறார்.

    பள்ளி ஆல் இலை - அப்பொழுது தோன்றியது ஓர் ஆலந்தளிராகிய படுக்கையிலே ஏழ் உலகும் கொள்ளும் வள்ளல் வல்வயிற்றுப் பெருமான் - ஏழ் உலகங்களையும் வயிற்றிலே வைத்து அப்படுக்கையில் அறிதுயில் செய்கிறின்றவன். 2உள்ளே புக்க உலகங்கட்கு இடம் கொடுத்தலோடு அமையது. இன்னம் வேறு தனியாக உலகங்கள் இருப்பினும், அவற்றிற்கும் இடம் கொடுக்க வல்ல வயிறு ஆதலின், ‘வள்ளல் வயிறு’ என்றும், உள்ளே புக்க பொருள்கட்கு அச்சமென்பது சிறிதும் இல்லாத வண்ணம் காப்பாற்ற வல்ல மிடுக்கினையுடைத்தாய் இருத்தலின், ‘வல் வயிறு’என்றும், இப்படிக் காப்பாற்ற வேண்டிய கடமையினையுடையவனாதலின், காப்பாற்றுகிறான் என்பார், ‘பெருமான்’ என்றும் அருளிச் செய்கிறார்.

_____________________________________________________________

1. அகடிதகடநா சாமர்த்தியம் - செயற்கரிய செயல்களைச் செய்தல்

2. ‘பத்து நாலென அடுக்கிய உலகங்கள் பலவின் மெத்து யோனிகள் ஏறினும் வெளியிடம்
  மிகுமால் முத்த ரானவ ரிதன்நிலை மொழிகுவ தல்லால் இத்த ராதலத் தியம்புதற்
  குரியவர் யாரே?’

(கம்பரா.மீட். 159.)

  என்ற செய்யுள் ஈண்டு ஒப்பு நோக்கல் தகும்.