முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

அவன

இரண்டாந்திருவாய்மொழி - பா. 8

49

    அவன் தன் கள்ளம் மாயம் மனம் கருத்தை ஆர் அறிவார் - ஒருவரும் அறியாதவாறு இன்னம் உள்ளே உள்ளே இருப்பதாய், அறிந்த தன்மை ஆச்சரியமாக இருக்கிற அவனுடைய மனத்தின் வியாபாரத்தை யாவர் அறிவார்? ‘ஏன்? நீர் அறிந்து சொன்னீரே?’ எனின், கண்டது ஒன்றைச் சொன்னேன் இத்தனை. போக்கி, ‘முழுதும் யான் தான் அறிந்தேனோ?’ என்பார், ‘யார் அறிவார்?’ என்கிறார்.

(7)

129

        கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
        வருத்தித்த மாயப் 1பிரான்அன்றி யாரே
        திருத்தித் திண்ணிலை மூவுலகும் தம்முள்
        இருத்திக் காக்கும் இயல்வினரே?

    பொ-ரை : ‘தன் நினைவிலேயே எல்லாத் தேவர்களையும் எல்லாப் பொருள்களையும் உண்டாக்கின ஆச்சரியமான செயல்களையுடையவனை அல்லாமல், இம்மூன்று உலகங்களையும் திருந்தச் செய்து, தனது திருவுள்ளத்தே வைத்து, ஒரு நோவும் வாராதபடி காத்து நோக்குகின்ற இயல்பினையுடையவர் வேறு யாவர்? ஒருவரும் இலர்,’ என்றவாறு.

    வி-கு : ‘காக்கும் இயல்வினர் மாயப் பிரான் அன்றி யாரே?’ எனக்கூட்டுக. வருத்தித்த - உண்டாக்கின, காக்கும் - எச்சம்.

    ஈடு : எட்டாம் பாட்டு. படைத்தலையும் காத்தலையும் தனக்கு அதீனமாக உடையவன் ஆகையாலே இவனே இறைவன் என்கிறார்.

    கருத்தில் தேவும். இயல்வினர் யாரே - ‘தன்னுடைய நினைவினாலே தேவ சாதியையும் மற்றும் உண்டான எல்லாப் பொருள்களையும் உண்டாக்கின ஆச்சரியத்தையுடையனான சர்வேஸ்வரனை அன்றி, மூன்று உலகங்களையும் திண்ணிதான நிலையினையுடைய வாம்படி திருத்தி, தம்முள் இருத்தி, அவ்வப் பொருள்கட்குத் தகுதியான பாதுகாத்தல்களையும் திருவுள்ளத்தே வைத்துப் பாதுகாத்தலைச் செய்யுமிதனை 2இயல்வாக உடையவர் யார்?’ என்கிறார். 3‘‘காப்பாற்றுவதில் நிலைநின்றவனாயும் எல்லா உயிர்கட்கும் ஈஸ்வரனாயும் மகாத்துமாவாயும் இருக்கிற விஷ்ணுவைத் தவிர, காத்தலாகிய ஆற்றல் வேறு ஒருவர்க்கும் இன்று,’ என்பது விஷ்ணுபுராணம்.

(8)

_____________________________________________________________

1. ‘பிரானை அன்றி’ என்பதும் பாடம்.

2. ‘அருள்குடையாக அறங்கோ லாக
  இருநிழல் படாமை மூவேழ் உலகமும்
  ஒருநிழ லாக்கிய ஏமத்தை மாதோ.

(பரி. 3. 74 - 76)

  என்பது பரிபாடல்.

3. ஸ்ரீ விஷ்ணு புரா. 1. 22: 19