முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
12

    வி-கு : ஞாலம் - ஆகுபெயர். ‘மா ஞாலம் மனம் வைக்க மாட்டாது,’ எனக் கூட்டுக. ‘திருவுருவம் மனம் வைக்க’ என்பதனை இடைநிலைத் தீவகமாக முன்னும் பின்னுங்கூட்டுக.

    ஈடு : நான்காம் பாட்டு. 1மேற்பாசுரத்தில், தாம் ‘உரைக்க மாட்டேன்’ என்றார்; இவனுடைய போக்யதாதிசயம் இருந்தபடியால் சிலராலே கிட்டலாயிருந்ததில்லை; இனி சமுசாரிகள் இழந்து நோவுபட்டுப் போமித்தனையன்றோ என்று அழகருடைய அழகின் மிகுதி பேசுவிக்கப் பேசுகிறார்.

    இம்மலர்தலை மாஞாலம் நின்மாட்டாய மலர்புரையும் திரு உருவம் மனம் வைக்க மாட்டாதேயாகிலும் - 2திருநாபிக்கமலத்தை அடியாகவுடைத்தான இப்பெரிய உலகமானது உன்னுடைய நிதி போலச் சிலாக்கியமாய் மலர்ந்த புஷ்பத்தினுடைய சுகுமாரமாயிருந்துள்ள திருமேனியிலே நெஞ்சை வைக்க மாட்டாதேயாகிலும். ‘உலகம் மாட்டாமைக்குக் காரணம், படைக்கப்படுதல், கர்மங்கட்குக் கட்டுப்பட்டிருத்தல்’ என்பார், ‘இம்மலர்தலை மாஞாலம்’ என்கிறார். மாடு - செல்வம். மாடு என்பது மாட்டு எனத் தன்னொற்று மிக்கது. இனி, ‘நின் மாட்டாய’ என்பதற்கு ‘உன்னிடத்திலேயான’ என்று பொருள் கூறலுமாம். முதற்பொருளில் மாடு என்பது பெயர்ச்சொல்; இரண்டாவது பொருளில் உருபிடைச்சொல். இனி, ‘மாட்டாய’ என்பதனை ‘மட்டு ஆய’ என்ற சொல்லின் நீட்டல் விகாரமாகக் கொண்டு, ‘திருவடிகளில் தேனினுடைய வெள்ளம் பெருகுகிறது,’ என்கிறபடியே,

_____________________________________________________

1. ‘ஸ்வாநுபவத்தை விட்டுச் சமுசாரிகள் இழவிலே நெஞ்சு செல்லுமது
  ‘பரம்பொருளை அறிந்தவன் வேறு ஒன்றையும் பார்ப்பதில்லை,’
  என்னும்படியான விஷய வைலக்ஷண்யத்துக்குக் கொத்தையன்றோ?’ என்னும்
  வினாவைத் திருவுள்ளம் பற்றி, ‘மேற்பாசுரத்தில்’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். ‘போக்யதாதிசயம்’ என்றது, ‘மலர்த்துழாய் மாட்டே நீ’
  என்றதனைப் பற்றவாதல், ‘நின்மாட்டாய மலர் புரையும் திருவுருவம்’
  என்றதனைப் பற்றவாதல். போக்யம் - அனுபவிக்கப்படுகின்ற பொருள்கள்;
  போக்யதை - அப்பொருள்களின் இனிமை; அதிசயம் - அவ்வினிமையின்
  மிகுதி.

2. ‘பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம்
   விரிகமல உந்தியுடை விண்ணவனை’

  என்பது சிலப்பதிகாரம்.