முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
171

    ஈடு : ஆறாம் பாட்டு. 1‘ஈசுவரனுடைய இனிமையைச் சொன்னால் உளமும் செயலும் வேறுபட்டவர்கள் ஆவார்களாகில், அவர்கள் எல்லா அறிவின் பலமும் கைவந்தவர் ஆவார்கள்,’ என்கிறார்.

    மனிசரும் மற்றும் முற்றுமாய் - 2‘தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தாவரங்கள் இவற்றின் நடுவே அவதரித்தவனாய்’ என்கிறபடியே, மனிதர் தேவர்கள் சொல்லப்படாத விலங்கு தாவரங்கள் எல்லாமாய். மாயப் பிறவி பிறந்த - ஆச்சரியமான பல அவதாரங்களை எடுக்குமவன். கர்மங்கட்குக் கட்டுப்படாதவனாய் இருந்து கர்மங்கட்குக் கட்டுப்பட்டவர்களும் பிறக்கமாட்டாத பிறவிகளிலே பிறக்கின்றானாதலின், ‘மாயப்பிறவி’ என்கிறது. ‘ஒரு காரணமும் இல்லாமல் காரணமுடையார்க்கும் அவ்வருகே பிறக்க வல்லவன்’ என்பதாம். தனியன் - இப்படி அவதரித்தும், போகும் அன்று உடுத்த 3ஒலியலோடே ஆயிற்றுப் போவது. ‘சேர்ந்து போனார் ஒருவரும் இலரோ?’ எனின், தொடர்ந்து செய்த இவ்வவதாரங்களிலே இராமாவதாரம் ஒன்றிலும் ‘நாலிரண்டு பேர் கூடப்போனார்கள்’ என்று கேட்டோமித்தனையேயன்றோ? ‘சேர்ந்து போனார் இலரேயாயினும், இங்கிருந்த நாளில் பரிவருண்டோ?’ எனின், ‘இவன் நமக்காகப் பிறந்தான்’ என்று நினைக்கைக்கும் ஒருவரும் இலரே அன்றோ? பிறந்த அது தன்னையே 4குற்றமாக விரித்துப் பேசுகின்றவர்களேயன்றோ உளராவது?

    பிறப்பிலிதன்னை - இப்படிப் பிறருக்காக அவதரித்தால் அவ்வவதாரத்தால் பயன் முழுதும் பெறாதே ஒழிந்தாலும், ‘நாம் வருந்தியும் இது பலித்தது இல்லையே!’ என்று கைவாங்குகையன்றி,

_____________________________________________________

1. பாசுரத்தின் மூன்றாம் அடியை நோக்கி, ‘ஈசுவரனுடைய இனிமையை’
  என்கிறார். ‘முழுதுணர் நீர்மையினாரே’ என்றதனைக் கடாக்ஷித்து, ‘எல்லா
  அறிவின் பலமும் கைவந்தவர் ஆவர்கள்’ என்கிறார்.

2. வரதராஜஸ்தவம், 18.

3. ஒலியல் - வஸ்திரம்.

4. ‘குற்றமாக ... பேசுகின்றவர்களே’ என்றது, சாபத்தாற்பிறந்தான் என்பது
  போன்றவற்றைக் கூறல்.

  ‘கோதண்டத் தானத்தன் வாள்கதை நேமியன் கோலவட
   வேதண்டத் தானத்தன் இன்னிசை யான்மண்ணும் விண்ணுமுய்ய
   மூதண்டத் தானத் தவதரித் தானெனின் முத்தி;வினைத்
   தீ்தண்டத் தானத் தனுவெடுத் தானெனில் தீநரகே.’

  என்றார் பிள்ளைப்பெருமாளய்யங்கார்.