முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
223

அவ

அவ்விடத்தை விபூதியாக நினையுங்கோள்,’ என்று பணிப்பர் ஆண்டான். 1‘அருச்சுனா! எவர்கள் எவ்விதமாய் என்னை வணங்குகிறார்களோ, அவர்களுக்கு அவ்விதமாகவே இருந்து நான் அருள் புரிகிறேன்,’ என்றும், 2‘சலனம் அற்ற மனத்தினால் செய்யத்தக்கவன்’ என்றும், 3‘சங்கற்பத்துக்குத் தகுதியாக நினைக்கப்படுகின்ற விஷ்ணு’ என்றும், 4‘பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்படுகின்ற திருமேனி’ என்றும், பிரமாணங்கள் கூறாநிற்கும். ‘ஆயின், இவ்வுலக சம்பந்தமில்லாத விக்கிரகத்திலே செலுத்தும் விருப்பத்தை அர்ச்சாவதாரத்தில் செலுத்தமுடியுமோ?’ எனின், அசாதாரண விக்கிரகத்தை நாம் ஆதரிக்கிறதும் ‘அவன் விரும்பி மேற்கொண்டது’ என்றுதானே? அதைப் போன்று, இதுவும் அவன் விரும்பி மேற்கொண்டானாகில், ஆதரிக்கத் தட்டு இல்லையே? ‘ஆயின், அசாதாரண விக்கிரஹத்தைப் போன்று அர்ச்சாவதாரத்தில் அவன் விரும்பி எழுந்தருளியிருப்பானோ?’ எனில், முதல்தன்னிலே அவன் திருமேனியை விரும்பி மேற்கொண்டதும் 5‘பக்தாநாம் - பத்தர்களுக்காகவே’ என்கிறபடியே, அடியார்களுக்காக அன்றோ? அது காரியமாய்ப் பயன் தருமிடத்திலே அன்றோ மிகவும் உறைக்க இருப்பது? ஆகையாலே, நீள் கடல் வண்ணன் அவன் ஆகும்.

(9)

287

        கடல்வண் ணன்கண் ணன்விண் ணவர்கரு
            மாணிக் கம்எனது ஆர்உயிர்
        படஅ ரவின்அ ணைக்கி டந்த
            பரஞ்சு டர்பண்டு நூற்றுவர்
        அடவ ரும்படை மங்க ஐவர்கட்கு
            ஆகி வெஞ்சமத்து அன்றுதேர்
        கடவி யபெரு மான்க னைகழல்
            காண்பது என்றுகொல் கண்களே?

________________________________________________ 

1. ‘நெஞ்சினால் நினைப்பான் எவன்? அவன் நீள்கடல் வண்ணன் ஆகும்’
  என்று கொண்டு கூறிய முதற்பொருளுக்குப் பிரமாணங்கள் காட்டுகிறார்
  ‘அருச்சுனா!’ என்று தொடங்கி. இது, ஸ்ரீ கீதை, 4 : 11.

2. தைத்திரீய நாராயண உபநிடதம். இவ்வுபநிடத வாக்கியத்தோடு,
  ‘மனக்கோள் நினக்கென வடிவு வேறிலையே’ என்ற பரிபாடற்பகுதி ஒப்பு
  நோக்குக.

3. ஸ்ரீ விஷ்ணு புரா. 5 : 17.

4. ஸ்ரீ விஷ்ணு தர்மம்

5. ஜிதந்தா ஸ்தோத்திரம், 5.