முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
244

பிறவியில் படிகின்றயான்’ என்று வெறுக்கத் தக்கதாகச் சொன்ன பிறவிதன்னையே 1விரும்புகிறார் இப்போது; பாகவதர்களுக்கு அடிமைப்படுவதற்கு உறுப்பு ஆகையாலே. ‘மேன்மேல் எனப் பிறவிகள் உண்டாகவும் அமையும்; ஒரு பாகவதர் ஸ்ரீ பாதத்திலே வசிக்கப்பெறில்’ என்கிறார் என்றபடி. எம்மை ஆளும் பரமர் - என்னை அடிமை கொள்ளக்கூடிய ஸ்வாமிகள். ‘முன்பு அவனைப் ‘பரமன்’ என்றீர்; இங்கே இவர்களைப் ‘பரமர்’ என்னாநின்றீர்; இது இருக்கும்படி என்?’ என்னில், அனுபவிக்கும் குணங்களின் மிகுதியாலே சொல்லிற்று அங்கு; இங்கு, அக்குணங்களுக்குத் தோற்றவர்களைச் சொல்லுகிறது. ‘நன்று; ‘எவரேலும்’ எனின், அமையாதோ? ‘பயிலுந் திருவுடையார்’ எனல் வேண்டுமோ?’ எனின், அந்தச் சம்பந்தம் ஒழியச் சொல்லில் பகவானுடைய சம்பந்தம் அற்றதாம்.

(1)

290 

        ஆளும் பரமனைக் கண்ணனை
            ஆழிப் பிரான்தன்னைத்
       தோளும்ஓர் நான்குடைத் தூமணி
            வண்ணன்எம் மான்தன்னைத்
       தாளும் தடக்கையும் கூப்பிப்
            பணியு மவர்கண்டீர்
       நாளும் பிறப்பிடை தோறுஎம்மை
            ஆளுடை நாதரே.

   
பொ-ரை : ஆளுகின்ற மேலானவனை, கண்ணபிரானை, சக்கரத்தைத் தரித்த உபகாரத்தையுடையவனை, ஒப்பற்ற நான்கு தோள்களையுடைய பரிசுத்தமான நீலமணி போன்ற நிறத்தையுடையனான எம்பெருமானைத் தாளும் தடக்கையும் கூப்பி வணங்குகின்ற அவர்கள்தாம், பிறப்புகள்தோறும் எப்பொழுதும் எம்மை அடிமையாகவுடைய தலைவர் ஆவர்.

    வி-கு :
‘பணியுமவர் எம்மை ஆளுடை நாதர்,’ என்க. கண்டீர் - முன்னிலையசை. பணியுமவர் - வினையாலணையும் பெயர். எம்மை - தனித்தன்மைப்பன்மைப் பெயர்.
_____________________________________________________

1. ‘குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
   பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
   இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
   மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.’

  என்று கூறினாருமுளர்

(தேவாரம். திருநாவுக்கரையர்).