முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
297

New Page 1

     ‘ஆயின், அவ்வனுபவம் பரமபதத்தே போய்ப் பெறுவது ஒன்று அன்றோ?’ என்ன, புவியின்மேல் - ‘எங்கேனும் விடாய்த்தாரை எங்கேனும் விடாய் தீர்க்க ஒண்ணாது; பசித்த இடத்தே சோறு இடவேண்டும்,’ என்கிறார். ‘தேசம் இதுவே ஆனதைப் போன்று 1விஷயமும் இதுவேயாக வேண்டும்,’ என்கிறார் மேல்; பொன் நெடும் சக்கரத்து உன்னையே - விரும்பத்தக்கதாய், இனிமை எல்லை இன்றிக்கேயிருக்கிற திருவாழியை அடையாளமாக உடைய உன்னையே. ‘பரமபதத்தில் சக்கரத்தோடே இருக்குமோ?’ எனின், 2’பிரகிருதி மண்டலத்துக்கு மேலான ஸ்ரீ வைகுண்டத்தில் வசிப்பவர், திருவாழி திருச்சங்கு கதை இவைகளைத் தரித்திருப்பவர்’ என்பது ஸ்ரீ ராமாயணம். அவிவு இன்றி ஆதரிக்கும் - இடையீடு இன்றி ஆதரியாநின்றது. 3‘‘கிடைத்தற்கு அரியது’ என்று பாராமல் கிடைக்கும் விஷயத்திற்போலவே ஆசைப்படாநின்றது,’ என்றபடி. எனது ஆவியே - ‘தன்னடையே வரப்பெற வேண்டுங்காண்’ என்றால், அது கேளாது, ‘அவன் அருள் பெறுமளவில் நில்லாது’ என்னும்படியான ஆவி.

(6)

306

       ஆவியே! ஆரமு தே;என்னை ஆளுடைத்
       தூவிஅம் புள்ளுடை யாய்!சுடர் நேமியாய்!
       பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்
       கூவியும் காணப் பெறேன்உன கோலமே.

   
பொ-ரை : ‘எனது உயிரே! சுவை நிறைந்த அமிர்தமே! என்னை அடிமை கொண்டுள்ள சிறகையுடைய அழகிய கருடப் பறவையை உடையவனே! சுடர் பொருந்திய சக்கரத்தை உடையவனே! பாவியேனுடைய மனமானது புலம்பும்படி பல தடவை கூவியும் உன் கோலத்தைக் கண்டு அனுபவிக்கப் பெறுகின்றிலேன்,’ என்கிறார்.

    வி-கு : ‘புலம்பக் கூவியும் காணப்பெறேன்,’ எனக் கூட்டுக. ‘ஆளுடை’ என்பது உடையானுக்கு அடைமொழி: புள்ளுக்கு அடைமொழியாக்கலுமாம்.

____________________________________________________

1. ‘விஷயமும் இதுவேயாக வேண்டும்,’ என்றது, ‘பரமபதத்தில் அசாதாரண
  விக்கிரஹமே ஆகவேணும்,’ என்றபடி.

2. ஸ்ரீ ராமா. யுத். 114 : 15. இது, இராவணன் இறந்த பின் மண்டோதரி
  கூறியது.

3. ‘பொன் நெடும் சக்கரத்து உன்னை’ என்றதனை நோக்கிக் ‘கிடைத்தற்கு
  அரியது என்று பாராமல்’ என்கிறார்.