முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
349

New Page 1

டையும் - அடையக்கூடிய தேசம் நித்தியசூரிகள் இட்ட வழக்காய் இருக்கும்; ஆதலின், ‘வானவர் நாடு’ என்கிறார். இதனால், ஸ்ரீ வைகுண்டநாதன் பரமபதத்தில் குடியிருப்பாரைப் போன்று இருக்கின்றான் என்பதனைத் தெரிவித்தபடி. 1‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள்’ என்னுமதுவும் தன் பக்கலிலேயாய் இருக்கிறது. நீ கண்டுகொள் என்று - 2‘தேவரீர், பொக்கிஷத்தையும் பசுக்கொட்டிலையும் நகரத்தையும் பலத்தையும் பார்த்தருள வேண்டும்; தேவரீருடைய ஒளியால் எல்லாம் பத்துமடங்கு அதிகமாக என்னால் செய்யப்பட்டது,’ என்கிறபடியே, ஸ்ரீ பண்டாரத்தை வளர்த்து வைத்து, பெருமாள் மீண்டும் எழுந்தருளின போதே ஸ்ரீ பரதாழ்வான் காட்டிக் கொடுத்தாற்போலே வானவர் நாட்டை நீ கண்டுகொள்’ என்கிறார்.

    ‘‘வானவர் நாடு’ என்று வைத்து, ‘நீ கண்டுகொள்’ என்று இவனுக்கு முன்பே உள்ளது ஒன்றனைக் காட்டிக்கொடுத்தாற்போன்று சொல்லக் கூடுமோ?’ எனின், முன்பே அங்கு உளரான நித்தியசூரிகளோடு இன்று புக்க இவனோடு வாசி அற்று இருக்கின்றான் ஆதலின், அங்ஙனம் அருளிச்செய்கிறார். ‘அதற்கு அடி என்?’ என்னில், ‘அன்று ஈன்ற கன்றின் பக்கல் வாத்சல்யத்தாலே முன் ஈன்ற கன்றைக் காற்கடைக் கொள்ளும் பசுவின் தன்மையைப் போன்ற வாத்சல்யத்தின் மிகுதியே காரணம்’ என்க. 3‘ஏ வீரனே! நீ சிறிது வருத்தமுற்று இருந்தால் சீதையால்தான்

____________________________________________________

1. தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள்’ என்னுமதுவும் தன்
  பக்கலிலேயாய் இருக்கிறது,’ என்றதன் கருத்து, ‘சர்வேசுவரனைப் பார்த்து
  அடியார்கள் சொல்லுகிற வார்த்தை சர்வேசுவரனுக்கும் உண்டாய்
  இருக்கிறது,’ என்றபடி. இது, ‘வானவர் நாட்டையும்’ என்றதனைத்
  திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார். ‘தேவரீருடைய தேசத்திலே
  வசிக்கிற நாங்கள்’ என்பது, ஸ்ரீ ராமபிரானைப் பார்த்து முனிவர்கள்
  கூறுவது. ஸ்ரீ ராமா. ஆரண். 1 : 20.

2. ஸ்ரீ ராமா யுத். 127 : 55.

3. ஸ்ரீ ராமா. யுத். 41 : 4. இது, விபீஷணாழ்வானைப் பார்த்து ஸ்ரீ ராமபிரான்
  கூறியது.

  ‘இந்நிலை விரைவின் எய்தாது இத்துணை தாழ்த்தி யாயின்
  நன்னுதற் சீதை யால்என்? ஞாலத்தாற் பயன்என்? நம்பி!
  உன்னையான் தொடர்வல்; என்னைத் தொடரும்இவ் வுலக மென்றால்
  பின்னைஎன் இதனை நோக்கி விளையாடிப் பிழைப்பச் செய்தாழ்?’

  என்றார் கம்பநாட்டாழ்வார்.