முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
35

    வி-கு : ‘படைத்த வண்ணன்’ என்க. உழல்வேன் - வினையாலணையும் பெயர். ‘வீயப் பாய்ந்து வந்து கூடுவன்’ எனக் கூட்டுக.

    இத்திருவாய்மொழி நாற்சீர் நாலடியான் வருதலின் கலி விருத்தம் எனப்படும்.

    ஈடு : முதற்பாட்டில், 1‘உலகத்தைப் படைத்து, உன்னை வழிபடுகைக்கு உறுப்பாகக் கரண களேபரங்களைக் கொடுத்துவிட்டாய் நீ; நான் அவற்றை இதர விஷயப் பிராவண்யத்துக்கு உறுப்பாக்கிக் கெட்டுப்போனேன்; இங்ஙனமிருக்கிற நான் உன்னை வந்து கிட்டுவதொரு நாள் சொல்ல வேண்டும்,’ என்கிறார்.

    முந்நீர் - 2ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர் என்னும் மூன்று நீரையுடையதாதலின் ‘முந்நீர்’ எனப்பட்டது. இனி, 3‘இறைவன் முதலிலே தண்ணீரையே படைத்தான்,’ என்கிறபடியே, முதன்முன்னர்த் தண்ணீரைப் படைத்துப் பின்னரே அண்டத்தைப் படைத்தானாதலின், 4முன்னே படைத்த நீர் என்னுதல். ஞாலம்

________________________________________________

1. முதல் அடியையும், ‘எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவனே?’
  என்பதனையும் கடாக்ஷித்து, அவதாரிகை அருளிச்செய்கிறார். இந்த
  அவதாரிகை, எம்பெருமானார் நிர்வாகத்தைப் பின் பற்றியது. களேபரம் -
  உடல். பிராவண்யம் - ஈடுபாடு.

2. ‘யாற்று நீரும் ஊற்று நீரும் மழைநீருமுடைமையால், கடற்கு முந்நீர் என்பது
  பெயராயிற்று; அன்றி, ‘முன்னீர்’ என்றோதி நிலத்திற்கு முன்னாகிய நீர்
  என்றும் உரைப்ப,’ என்பர் புறநானூற்று உரையாசிரியர். (புறம்.  9)
  ‘முந்நீர் - கடல்; ஆகுபெயர்; ஆற்று நீர். ஊற்று நீர், மேனீர் என இவை’
  என்பார்க்கு, ‘அற்றன்று; ஆற்றுநீர் மேனீர் ஆதலானும், இவ்விரண்டும்
  இல்வழி ஊற்று நீரும் இன்றாமாதலானும், இவற்றை முந்நீர் என்றல்
  பொருந்தியது அன்று; ‘முதிய நீர்’ எனின் ‘நெடுங்கடலும் தன்னீர்மை
  குன்றும்’ என்பதனால், அதுவும் மேனீர் இன்றி அமையாமையின் ஆகாது;
  ‘ஆனால், முந்நீர்க்கும் பொருள் யாதோ?’ எனின், முச்செய்கையையுடைய
  நீர் முந்நீர் என்பது; முச்செய்கையாவன - மண்ணைப் படைத்தலும்
  மண்ணை அழித்தலும் மண்ணைக் காத்தலுமாம்,’ என்பர், அடியார்க்கு
  நல்லார். நச்சினார்க்கினியரும் இக்கருத்தினரேயாவர். 

3. மனு ஸ்மிருதி, 1 : 8.

4. இப்பொருளுக்கு, ‘முன்னீர்’ என்று பாடமிருத்தல் வேண்டும்.