முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
60

    ஈடு : பத்தாம் பாட்டு. 1இவர் ஆசையற்றவராய் முடியப் புக்கவளவில், ‘இவர் கிரமப்பிராப்தி பொறாதவர் போலும்!’ என்று நினைத்து, ‘நீர் ஒரு பெருவிடாயர் உண்டு என்றறிந்து, உமக்காக அன்றோ வடக்குத்திருமலையில் நிற்கிறோம்?’ என்று அந்நிலையைக் காட்டித் தரிப்பிக்கத் தரித்து, இனியராகிறார்.

    நமன் தமர் தலைப்பெய் காலம் - யமபடர் வந்து கிட்டுங் காலம். இவன் வாழ்கின்ற நாளில் செய்த குற்றங்களைப் 2பட்டோலை யெழுதிப் பலத்தை அனுபவிக்கும் சமயத்தில் வந்து முகங்காட்டுவார்களாதலின், ‘நமன் தமர் தலைப்பெய் காலம்’ என்கிறார். பாசம் விட்டால் - அவர்கள் தங்கள் கையிலுள்ள பாசத்தை வீசினால். அலைப்பூண் உண்ணும் அவ்வல்லல் எல்லாம் அகல - இவனுக்கு இவ்வருகே நசை கிடைக்கையாலே அது இங்கே இசிக்க, யமபடர்கள் அங்கே இசிக்கப்படும் துக்கத்துக்கு ஓரெல்லையில்லையாதலின், ‘அல்லல் எல்லாம்’ என்கிறார். அத்துன்பங்களை உவமை முகத்தால் விளக்குதற்கு ஒண்ணாதாதலின், ‘அவ்வல்லல்’ எனச் சுட்டுகிறார். இனி, இதற்கு, 3‘அவையெல்லாம் காணக்காண விட்டுக் கடக்க நிற்க, அவற்றோடு ஒத்ததான துன்பம்’ என்று எம்பார் அருளிச்செய்வர். என்றது, ‘அந்தத் துக்கத்தைப் போலேயிருக்கிற, பகவானைப் பிரிந்ததனால் உண்டான துக்கமெல்லாம் இவர்க்கும் அகல’ என்றபடி. இனி,

___________________________________________________
 

1. மேல் பாசுரத்தில், ‘எங்கினித் தலைப்பெய்வன்?’ என்றதனைக் கடாக்ஷித்து,
  ‘ஆசையற்றவராய்’ என்கிறார். இப்பாசுரத்தில், ‘கண்ணனைக் கண்டுகொண்டு’
  என்றதனைக் கடாக்ஷித்து, ‘அந்நிலையைக் காட்டி’ என்கிறார்.

2. பட்டோலை - பட்டது எழுதப்படும் ஓலை. பட்டது - நடந்தது.

3. ‘’திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்
  மறந்தும் புறந்தொழா மாந்தர் - இறைஞ்சியும்
  சாதுவராய்ப் போதுமின்கள் என்றான் நமனும்தன்
  தூதுவரைக் கூவிச் செவிக்கு.’

(நான்முகன் திரு. 68.)

  என்று பிரமாணம் இருக்கின்றதே? ஆதலின், ஸ்ரீவைஷ்ணவர்கட்கு யமபாதை
  உண்டாகக் கூடுமோ?’ என்ற வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, அதற்கு
  விடையாக, ‘அவையெல்லாம் காணக்காண’ என்று தொடங்கி அருளிச்
  செய்கிறார்.