முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
77

246

246

எந்தை தந்தைதந் தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகி ழும்திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.

    பொ-ரை : நித்தியசூரிகள் சேளை முதலியாரோடும் வந்து தூவி வணங்குகின்ற பூக்கள் வாசனை வீசுகின்ற திருவேங்கடத்து எழுந்தருளியிருக்கின்ற, முடிவில்லாத புகழையுடைய, நீலமேகம் போன்ற அழகையுடைய அண்ணல் என் குலத்திற்கு முதல்வன் ஆவான்.

    வி-கு : அண்ணல் - பெருமையுடையவன். சிந்துபூ - வினைத்தொகை.

    ஈடு : இரண்டாம் பாட்டு. 1‘குறைவில்லாத கைங்கரியத்தைப் பெறவேணும் என்று விரும்புகிறீர்; அது, இச்சரீர சம்பந்தம் அற்று அர்ச்சிராதி மார்க்கத்தாலே ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதொன்றன்றோ?’ என்ன, ‘அங்குள்ளாரெல்லாரும் வந்து அடிமை செய்கிறது இந்நிலத்திலே யாகையாலே, இங்கே பெறுதற்குக் குறையில்லை,’ என்கிறார்.

    எந்தை தந்தை தந்தை தந்தை தந்தைக்கும் முந்தை - 2‘அடியார் அடியார்தம் அடியார் அடியார் தமக்கடியார் அடியார் தம் மடியார் அடியோங்களே’ என்கிறபடியே, ஆத்தும சொரூபத்தை நிரூபிக்கப் புக்கால், அத்தலையே பிடித்து இவ்வளவும் வர நிரூபிக்குமாறு போலேயாயிற்று, பரம்பொருளின் சொரூபத்தை நிரூபிக்கப் புக்காலும் இத்தலையே பிடித்து அவ்வளவும் செல்ல நிரூபிக்கும்படி.

____________________________________________________

1. மேல் பாசுரத்தில் ‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்,’ என்றதனை
  இடமாகக்கொண்டு சங்கித்து, இப்பாசுரத்தில் ‘வானவர் வானவர் கோனொடும்
  சிந்து பூ மகிழும் திருவேங்கடம்’ என்றதனைக் கடாக்ஷித்து விடை
  அருளிச்செய்கிறார், ‘குறைவில்லாத கைங்கரியத்தை’ என்று தொடங்கி.

2. ‘ஏழ் தலைமுறைக்கு ஸ்வாமி என்பான் என்?’ என்னும் வினாவை
  எழுப்பிக்கொண்டு, அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘அடியார் அடியார்’
  என்று தொடங்கி. இங்கு ஏழ் தலைமுறை கூறப்பட்டுள்ளவாறு யாங்ஙனம்?’
  எனின், எந்தை என்பதில் தாம் ஒருவர், தம் தந்தை ஒருவர்; இவ்விருவரோடு
  மேலேயுள்ள ஐவரையும் கூட்டினால் ஏழ் தலைமுறையாதல் காண்க. ‘அடியார்
  அடியார்’ திருவாய். 3. 7 : 10.