முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
291

New Page 1

கைகளால் ஆரத்தொழுது - ‘பசியர் வயிறு ஆர உண்ண’ என்னுமாறு போன்று, உன்னைத் தொழவேண்டும் என்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே உறாவிக் கிடக்கிற இக்கைகளானவை நிறையத் தொழுது. இவற்றுக்குத் தொழாதொழிகை 1காதலையுடையவளாய் முலையெழுந்து வைத்துக் கணவனுடைய கைகளால் தீண்டப் பெறாததைப் போன்றதாதலின், 2கைகளால்’ என்று வேண்டா கூறுகிறார். 3சர்வேசுவரனை வணங்குவதற்காகவே கை கால் முதலிய அவயவங்களோடு கூடின விசித்திரமான இந்தச்சரீரம் ஆதிகாலத்தில் உண்டாக்கப்பட்டது,’ என்கிறபடியே, ‘கை வந்தபடி செய்ய அன்றோ இவர் ஆசைப்படுகிறது? வாய்க்கு ஏத்துதல் போன்று கைக்குத் தொழுகையும் ஆதலின், வாய் வந்தபடி சொல்லவும் கை வந்தபடி செய்யவுமே அன்றோ இவர் ஆசைப்படுகிறார்?’ என்றபடி. வேறு ஒரு பிரயோஜனத்துக்காகத் தொழுதால் பிரயோஜனத்தளவிலே மீளும்; சாதனம் என்ற எண்ணத்தோடு தொழில் பெற வேண்டிய பயன் கிடைத்த அளவிலே மீளும்; அங்ஙன் அன்றிக்கே, இதுவே செயலாய் இருத்தல் என்பார், ‘தொழுது தொழுது’ என்கிறார்.

    முத்தர்களுக்கு இலக்கணம் சொல்லும் போது 4சுவேதத் தீவில் வசிக்கின்றவர்களுக்கு எது இலக்கணமோ, அதுவே முத்தர்களுக்கு இலக்கணமாம்; ‘அவர்கள் தன்மை என்னை?’ எனில், எக்காலத்திலும் கைகூப்பி வணங்கிக்கொண்டே இருப்பார்கள்; அவ்வாறு செய்தலே தமக்கு விருப்பம் என்று சந்தோஷத்துடன் இருப்பார்கள்; ‘நம:’ என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டேயிருப்பார்கள்,’ என்று சுவேதத்தீவில் வசிக்கின்றவர்கள் படியைச் சொல்லியிருத்தல் ஈண்டு நினைத்தல் தகும்.

______________________________________________________

1. ‘காதலையுடையவளாய்’ என்று தொடங்கும் இவ்விடத்தில்.

  ‘அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகுநலம்
  பெற்றாள் தமியள்மூத் தற்று.’

  என்ற திருக்குறளை (1007) ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.

2. ‘’வாய்’ என வேண்டா கூறினார், தீய சொற்பயிலா என்பது அறிவித்தற்கு,’
  என்பது பரிமேலழகருரை.

(குறள் 90)

3. ஸ்ரீ விஷ்ணு தத்துவம். ‘கைவந்தபடி’ என்றது, சிலேடை, ‘வாய் வந்தபடி’
  என்றதும் சிலேடை.

4. நாராயணீயம். இங்குக் குறித்த சுலோகமும் வியாக்கியாதா எழுதிய
  பொருளும் வருமாறு: