முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
177

அழ

அழிந்து போவது, கிருஷ்ணனை அடைந்து பாவங்கள் அழிகின்றன,’ என்கிறபடியே, வியாதியின் மூலத்தை அறிந்த வைத்தியனைக் கிட்டின வியாதிபோலே அன்றோ சர்வேசுவரனைக் கிட்டினால் இவை நசிக்கும்படி?

‘வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங்கிற்றும் கண்டிலமால் ;- ஆனீன்ற
கன்றுயரத் தாம்எறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்
வன்துயரை ஆஆ மருங்கு.’

என்ற திருப்பாசுரம் இங்கு நினைக்கத்தகும்.                

(5)

382

1கரிய மேனிமிசை வெளிய
    நீறுசிறி தேஇடும்
பெரிய கோலத் தடங்கண்ணன்
    விண்ணோர் பெருமான்றனை
உரிய சொல்லால் இசைமாலைகள்
    ஏத்திஉள்ளப் பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்குஇன்று
    தொட்டும்இனி என்றுமே?

    பொ-ரை : ‘கரிய திருமேனியின்மேலே வெண்மையான சூர்ணத்தைச் சிறிதளவே இடுகின்ற, பெரிய அழகிய விசாலமான திருக்கண்களையுடையவனும், நித்தியசூரிகளுக்குத் தலைவனுமான சர்வேசுவரனைத் தகுதியான சொற்களாலே சமைந்த இசையோடு கூடிய மாலைகளால் துதித்து நினைக்கின்றவனான எனக்கு இன்று தொடங்கி இனி எப்பொழுதும் கிடைத்தற்கு அருமையான பொருள் ஒன்று உண்டோ?’ என்கிறார்.

    வி-கு : ‘இடும்’ என்பதனைக் கண்ணுக்கு அடைமொழியாக்குவர் வியாக்கியாதா. அதனைப் பெருமானுக்கு அடைமொழியாக்குவர் திருக்குருகைப்பிரான் பிள்ளான். ‘இடும் பெருமான்’ என்றும்,

_____________________________________________________

1. அரசர்கள் மங்களத்தின்பொருட்டுக் கண்களில் அஞ்சனம் சிறிது இடுதல்
  மரபு.

  ‘முனைவன் தொழுது முடிதுளக்கி முகந்து செம்பொன் கொளவீசி
   நினைய லாகா நெடுவாழ்க்கை வென்றிக் கோல விளக்காகப்
   புனையப் பட்ட அஞ்சனத்தைப் புகழ எழுதிப் புனைபூணான்
   கனைவண் டார்க்கு மலங்கலும் கலனும் ஏற்பத் தாங்கினான்.’

  என்பர் திருத்தக்கதேவர்,

(சிந். 2357.)

  ‘அமிழ்தியல் யோகத்து அஞ்சனம் வகுத்து’

  என்பது பெருங்கதை, 1.34:51.