முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
23

தன

தன்னுடைய சரீரத்தைக் காப்பதற்காக அவர்கள் பக்கலிலே சென்று இரக்கத் தொடங்கும். துணி முன்பு நால - 1‘அந்தத் திரிஜடன் என்னும் பிராஹ்மணன் மனைவியின் வார்த்தையைக் கேட்டு உடுத்துவதற்குப் போராத துணியை உடுத்திக்கொண்டு புறப்பட்டான்,’ என்கிறபடியே, பின்பு கொண்டு இணைக்க எட்டம் போராமையாலே முன்னே தொங்காநிற்கும். பல் ஏழையர்தாம் இழிப்ப -2இவன்பக்கல் தங்களுக்கு உண்டான அன்பு தோன்றச் 3செத்துக் காட்டுவர்கள் முன்பு; இப்போது, தங்களை வைத்துக்கொண்டு இருப்பவனுக்குப் பிரியமாக, இவன் இன்பத்தை அனுபவிப்பதற்குத் தகுதி இல்லாதவன் என்பதனையும், இவனிடத்துள்ள உலோபத் தன்மையையும் சொல்லி விருப்பம் இல்லாத சொற்களைக் கூறாநிற்பார்கள். இவர்கள் தாம் பலர் ஆதலின், ‘பல் ஏழையர்’ என்கிறார். செல்வர் - ‘நம்மிடத்துள்ள அன்புத்தளை அன்றோ இவர்களை இங்ஙனம் சொல்லச் செய்கிறது?’ என்று, அவர்கள் கூறிய வார்த்தைகளையும் புத்தி பண்ணாதே செல்வார்கள்;

_____________________________________________________

1. ‘முன்பு நால’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார். ‘அந்தத் திரிஜடன்’
  என்று தொடங்கி. இது, ஸ்ரீராமா. அயோத். 32 : 32. எட்டம் - நீளம்.

  ‘நீர்ப்படு பருந்தின் இருஞ்சிற கன்ன
  பாறிய சிதாரேன்’

(பதிற். 12. 19-20)

  ‘கையது கடனிறை யாழே; மெய்யது
   புரவல ரின்மையிற் பசியே; அரையது
   வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
   ஓம்பி உடுத்த உயவற் பாண!’

(புறம். 69)

  ‘வேரொடு நனைந்து வேற்றிழை நுழைந்த
   துன்னற் சிதாஅர் துவர நீக்கி’  

(பொருநராற். 80-81 )

  என்பன ஈண்டு ஒருபுடை ஒப்பு நோக்கத் தக்கன.

2. ‘ஏழையர்’ என்பதற்கும், ‘இழிப்ப’ என்பதற்கும் வாசனை ‘இவன் பக்கல்’
  என்று தொடங்கும் வாக்கியம்.

3. ‘அங்கோட்டு அகலல்குல் ஆயிழையாள் நம்மொடு
   செங்கோடு பாய்துமே என்றாள்மன் - செங்கோட்டின்
   மேற்காண மின்மையால் மேவா தொழிந்தாளே
   காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.’

(நாலடியார்)

  என்ற செய்யுள் ஈண்டு ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.