முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
238

396

396

கீழ்மையி னால்அங்குஓர் கீழ்மகன்
    இட்ட முழவின்கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர்அணங்கு
    ஆடும்பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம்இந்
    நோய்க்கும்ஈ தேமருந்து;
ஊழ்மையில் கண்ணபி ரான்கழல்
    வாழ்த்துமின் உன்னித்தே.

    பொ-ரை : ‘அங்குத் தாழ்ந்த மகனாலே அடிக்கப்படுகின்ற முழவின்கீழே இருந்துகொண்டு, குற்றமுள்ளன பலவற்றைச் சொல்லிக்கொண்டு, நீங்கள் உங்கள் கீழ்மையினாலே அணங்கு ஆடுகின்ற பொய்யை நான் காணமாட்டேன்; எழுவகைப்பட்ட பிறப்புகளுக்கும் பாதுகாவலாம்; இதுவே இந்நோய்க்கும் மருந்தாகும்; ஆதலால், முறையாகக் கண்ணபிரானுடைய திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கள்,’ என்றவாறு.

    வி-கு : ‘நீர் கீழ்மையினால் அணங்கு ஆடும் பொய்’ எனக் கூட்டுக. ‘கண்ணபிரானுடைய கழல் உன்னித்து வாழ்த்துமின்,’ என மாறுக. நாழ்மை : குற்றம்.

    ஈடு : ஒன்பதாம் பாட்டு. 1‘நீங்கள் செய்கின்ற பயன் இல்லாத காரியங்களை நான் காணமாட்டேன்; பிழைக்க வேண்டும் என்று இருந்தீர்கோளாகில், கிருஷ்ணன் திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கள்,’ என்கிறாள்.

    கீழ்மையினால் - உங்கள் தண்மையினாலே; இவர்களுக்குத் தண்மையாவது, இராஜச தாமச குணங்களாலே மறைக்கப்பட்டிருத்தல். ‘ஆகையால் அன்றோ இக்காரியம் செய்கிறார்கள்?’ என்றபடி. அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின்கீழ் - 2‘இன்ன இடத்தான், இன்னான்’ என்று சொல்ல ஒண்ணாத ஒரு சண்டாளன் அடிக்கிற முரசின் கீழே புக்கிருந்து. நாழ்மை பல சொல்லி - அவற்றுக்கு இல்லாத ஏற்றங்களைப் பலவும் சொல்லி; என்றது, 3‘உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும்’ என்று

_____________________________________________________

1. ‘பொய்’ என்றதனை நோக்கிப் ‘பயனில்லாத காரியங்களை’ என்கிறாள்.

2. ‘ஓர்’ என்றதற்கு பாவம் அருளிச்செய்கிறார், ‘இன்னவிடத்தான், இன்னான்’
  என்று தொடங்கி.

3. திருவாய்மொழி, 4. 5 : 10.