முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
306

    கறையினார் துவர் உடுக்கை - கறை மிக்குத் 1துவர் ஊட்டின சிவந்த தோலாயிற்று உடுக்கை. காட்டில் பழங்களைப் பறித்து இடுகையாலே கறை மிக்கு இருக்கும்; அதனால், கறைமிக்க துவர் ஆயிற்று உடுக்கை;’ அதனை நோக்கிக் ‘கறையினார் துவர்’ என்கிறது. ‘உடுக்கை’ என்றது, ஆயர்கள் காட்டிற்குப் போகும் போது முள் கிழியாமைக்கு உடுக்கும் உடைத்தோலைச் சொல்லுகிறது. 2இதனால், ‘அரையில் பீதகவண்ண ஆடை வேண்டாள் ஆயிற்று இவள்; பசுக்களைக் காப்பாற்றின வடிவோடே அணையக் கணிசிக்கிறாள்,’ என்றபடி. கடையாவின்கை - உரிய காலங்களிலே கறப்பதற்குக் கையிலே கடையவும் கொண்டாயிற்றுத் திரிவது; கடையா - மூங்கிற்குழாய். கழிகோல்கை -மூங்கிற்குழாயையும் வீசுகோலையும் கையிலேயுடையவர். கழிகோல் - வீசுகோல்.  அன்றிக்கே, 3 ‘கொடுவைப் பசுக்களை நியமித்துக் கறக்கைக்கு வீசுகோலைக்  கையிலே கொண்டு திரியுமவர்’ என்னலுமாம். அன்றிக்கே, ‘கழிகோல்’ என்பதற்கு, ‘முன்னணைக்கன்று  பசுக்களோடே போனால் முலையுண்ணாமைக்குக் கொறுக்கோல் என்பது ஒன்றனை அதன் முகத்திலே கட்டிவிடுவார்கள்; அதனைச் சொல்லுதல்’ என்னுதல். 4சந்யாசிகள் தந்தாமுக்கு என்ன ஓர் இருப்பிடம் இல்லாமையாலே மாத்திரை தொடக்கமானவற்றைக் கையிலே கூடக் கொண்டு திரிவார்கள் ஆயிற்று; அவர்கள் போன்று பசுக்களுக்குப் புல்லும் நீரும் உள்ளவிடத்திலே தங்குவார்களித்தனையன்றோ இவர்களும்?

_____________________________________________________

1. துவர் - சாயம்.

2. ‘திருப்பீதாம்பரத்தைச் சொல்லாமல், தோலைச் சொல்லுவான் என்?’ என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார், ‘இதனால்’ என்று தொடங்கி.

  ‘பெண்ணின் வருத்த மறியாத பெருமான் அரையில் பீதக
  வண்ண வாடை
கொண்டுஎன்னை வாட்டந் தணிய வீசிரே.’

  என்பது நாய்ச்சியார் திரு. 13 : 1.

  கணிசிக்கிறாள் - விரும்புகிறாள்.

3. கொடுவைப் பசு - துஷ்டப் பசு; கறப்பதற்கு இடம் கொடாமல் உதைக்கின்ற
  பசு.

4. ‘பசுக்களோடே கூடத் திரிவான் என்?’ என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார், ‘சந்யாசிகள்’ என்று தொடங்கி. மாத்திரை -
  பிக்ஷாபாத்திரம், உறி முதலானவை.