முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
347

மாறுகை - தவிருகையாய், ‘ஏங்காதே கூப்பிட்டு’ என்னுதல். அன்றிக்கே, ‘ஏமாற்றம்’ என்பதே ஒரு சொல்லாய், அதாவது, துக்கமாய், ‘துக்கித்துக் கிடந்து கூப்பிட்டு’ என்னுதல். ‘ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய்’ என்னக் கடவதன்றோ? அன்றிக்கே, ‘ஏ’ என்பது தெளிவு; ‘மாறுகை’ என்பது அழிகை; அதாவது, ‘தெளிவு அழிகை’ என்று பிள்ளை அமுதனார் பணிப்பர். இவை என்ன உலகு இயற்கை - இவை ஒரு உலக வாழ்வு இருக்கும்படி என்? என்றது, ‘வாழ்வதற்கு எண்ணாநிற்க முடிவது; நான்கு காசு கையிலே உண்டானவாறே ‘இது நமக்கு உண்டு’ என்று இருக்க, அது அழிந்து போவது; சரீர சம்பந்தம் காரணமாக வருகிறவர்களையே தனக்கு எல்லாவித உறவுமாக நினைத்து, அவர்களுக்கு ஒன்று வந்தவாறே ‘பட்டேன் கெட்டேன்!’ என்று கூப்பிட்டு அலற்றுவது ஆகிற இவையும் ஒரு உலகப் போக்கே! பிரானே!’ என்கிறார் என்றபடி.

    ‘நன்று; அவர்கள் என்படில் உமக்கு நல்லது? நீர் நம்மையே சொல்லிக் கூப்பிடும்படி பண்ணினோமே! ‘சீலமில்லாச் சிறியனேலும்’ என்ற திருவாய்மொழியில் கூப்பிடு அன்றோ உம்மது?’ என்ன, அருளிச்செய்கிறார் மேல்: நான் ஆமாறு ஒன்று அறியேன் - 1‘அவர்கள் தாம் கூப்பிடுகிறது உன்னோடு சம்பந்தம் இல்லையாயோ? சரீரத்தோடே இருக்கையாலே அன்றோ? அதனை என்னினின்றும் தவிர்த்தாயோ? இவ்வுடம்பு கிடக்கையாலே, இன்னதற்கு நான் கூப்பிடப் புகுகின்றேன் என்று அறியாநின்றேனோ?’ என்கிறார். 2அன்றிக்கே, ‘மக்களுடைய இந்தத் துக்கம் போதற்கு விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்னுதல்; என்றது, ‘நீ எனக்குச் செய்து தந்த வாசி, நான் இவர்களுக்குச் செய்து கொடுக்கும் விரகு ஏதோ என்று அறிகிலேன் என்கிறார்,’ என்றபடி.

    அரவணையாய் அம்மானே - இவற்றைக் காக்கும் பொருட்டுத் திருவனந்தாழ்வான்மேலே திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளி, இவற்றைப் பாதுகாத்தல் உன் பேறாம்படியான

_____________________________________________________

1. ‘ஆமாறு ஒன்று அறியேன்’ என்கிறவருடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார், ‘அவர்கள்தாம்’ என்று தொடங்கி.

2. ஆழ்வான் நிர்வாஹத்திற்குச் சேரப் பொருள் அருளிச்செய்கிறார்,
  ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.