முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
45

1த

    1திருவடியைக் கண்ட வீமசேனன், ‘இவன் சத்திமான்’ என்று தோற்றுகையாலே, 2‘ஓ வீரனே! கடலைத் தாண்டுதற்கு முயற்சி செய்யப்பட்டதும் ஒப்பு இல்லாததும் பெரியதுமான உனது சரீரத்தைக் காண விரும்புகிறேன்,’ என்கிறபடியே, ‘நீ முன்பு கடல் கடந்த வடிவை நான் இப்போது காண வேண்டும்,’ என்றானே அன்றோ? அப்படியே, இவளும் பகவானுடைய சத்தியை அறிந்தபடியாலேயும், தன் ஆசையின் மிகுதியாலேயும் இறந்த காலத்தில் உள்ளவற்றையும் இப்போதே பெற வேண்டும் என்று ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.

344

பாலன்ஆய், ஏழ்உலகு உண்டு, பரிவுஇன்றி
ஆலிலை அன்ன வசம்செயும் அண்ணலார்
தாளிணை மேல்அணி தண்அம் துழாய்என்றே
மாலுமால் வல்வினை யேன்மட வல்லியே.

    பொ-ரை : அதிபால்யமான வடிவையுடையனாய் எல்லா உலகங்களையும் உண்டு வருத்தம் இல்லாமல் ஆலின் இலையிலே உண்ட உணவு அறாமைக்குத் தகுதியாகக் கிடக்கும் பெருமையையுடைய இறைவனது இரண்டு திருவடிகளின்மேலே அணிந்த குளிர்ந்த அழகிய திருத்துழாயினைப் பெறவேண்டும் என்றே மயங்காநின்றாள்; தீவினையேனாகிய என்னுடைய, பற்றியதை விடாத வல்லிக்கொடி போன்ற பெண்ணானவள்.

_____________________________________________________

1. ‘அரியதொன்றிலே சாபலம் பண்ணுகைக்கு அடி யாது?’ என்னும்
  வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு, ஓர் எடுத்துக்காட்டு மூலமாக அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘திருவடியை’ என்று தொடங்கி. சாபலம் -
  பற்றியதை விடாமை - ஆசை.

2. பாரதம். இந்தச் சுலோகப் பொருளோடு,

  ‘நீட்டு மவ்வரம் அவனுக்கு நேர்ந்தனன் அனுமான்;
  மீட்டும் நல்வரம் ஒன்றுமுன் வேண்டினன் வீமன்;
  ஈட்டு மாநிதி இலங்கைதீ இட்டநாள் இசைந்த
  மோட்டு ருத்தனைக் காட்டுகென் றிறைஞ்சினன் முதல்வன்.’

(வில்லி பா.ஆரணிய பர்.புட்ப யாத். செய். 49.)

  என்ற செய்யுள் ஒப்பு நோக்கலாகும்.