முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
53

New Page 1

‘நன்மாலைகள்’ என்கிறார். 1அன்றிக்கே, ‘ஆராதனத்திலும் விபூதி விஷயமாகவும் பரந்திருக்கும் வேதத்தையும் ஸ்ரீ புருஷசூக்தம் முதலானவைகளையும் கொண்டு’ என்னலுமாம்.

    தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற - தேவர்களும் சனகன் முதலிய முனிவர்களும் 2‘சுவர்க்கத்திலுள்ள தேவ கூட்டத்தாலும் பூமியிலுள்ள மனிதர்களாலும் ஆகாயத்தில் திரிகின்ற வைமாநிகர்களாலும் துதிக்கப்பட்டவனாய் உலகத்தை அளந்த அந்தத் திரிவிக்கிரமன், எப்பொழுதும் எனக்கு மங்களம் உண்டாகுமாறு துணையாக வேண்டும்,’ என்கிறபடியே துதித்துப் பற்றும்படி திரு உலகு அளந்து நின்ற. சே அடி - 3‘மா முதல் அடிப்போது ஒன்று கவிழ்த்து அலர்த்தி’ என்கிறபடியே, தலையிலே பூப்போலே வந்திருக்கிற போது மேலே பார்த்தவாறே அனுபவிக்கத் தகுந்ததாய் இருந்த சிவப்பையுடைத்தாய் இருக்கை. 4‘அடியில் ராகம் அன்றோ இப்படி ஆக்கிற்று இவளை? அன்றிக்கே, செவ்விய அடி என்றாய், அடிக்குச் செவ்வையாவது, 5‘பொதுநின்ற பொன்னங்கழல்’ என்கிறபடியே, அடியார் அடியர் அல்லார் என்ற வேற்றுமை அற எல்லார் தலைகளிலும் வைத்த செவ்வை. 6‘தளிர் புரையும் திருவடி என் தலைமேலவே’ என்று ஈடுபடும்படி அன்றோ அடியில் நேர்மை இருப்பது?

    சே அடிமேல் அணி செம்பொன் துழாய் என்றே கூவுமால் - அத்திருவடிகளிற்சார்த்தின விரும்பத்தக்கதான திருத்துழாய் என்று சொல்லிக் கூப்பிடாநின்றாள்.

_____________________________________________________

1. ‘அன்றிக்கே’ என்று தொடங்கி வேறும் ஒரு பொருள் அருளிச்செய்கிறார்.
  இப்பொருளில் வேதங்களும் நன்மாலைகளும் என்று உம்மைத் தொகை.
  முன்னைய பொருளில் வேற்றுமைத் தொகை; ‘வேதத்திலேயுள்ள
  நன்மாலைகள்’ என்பது பொருள்.

2. ஸ்ரீ விஷ்ணு தர்மம்.

3. திருவாசிரியம், 5.

4. ‘அடியில் ராகம் அன்றோ?’ என்பது சிலேடை : திருவடிகளின் செந்நிறம்;
  திருவடிகளில் ஆசை. ‘அடியிலே ஆசை’ என்னவுமாம்.

5. மூன்றாந்திருவந். 88.

6. திருநெடுந்தாண்டகம், 1. ‘என் தலைமேலவே’ என்கையாலே நேர்மை
  தோற்றுகிறது என்றபடி.