முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
62

மடந

மடந்தையை - 1எப்போதும் ஒக்க போகத்திற்குத் தகுதியான பருவத்தையுடையவளை. வண் கமலத் திருமாதினை - அழகிய தாமரைப்பூவை இருப்பிடமாகவுடைய திருவாகிற பெண் பிள்ளையை. ‘சாக்ஷாத் இலக்குமியை’ என்றபடி. தடம்கொள் தார் மார்பினில் வைத்தவர் - பெரிய பிராட்டியாருக்குத் திவ்ய அந்தப்புரமாகப் போகும்படி இடமுடைத்தாய், இறைமைத் தன்மைக்கு அறிகுறியான மாலையையுடைத்தான மார்பிலே வைத்தவர்.

    மார்பினில் வைத்தவர் தாளின்மேல் வடம்கொள் பூந்தண் அம் துழாய் மலர்க்கே இவள் மடங்குமால் - 2‘மஹாலக்ஷ்மியானவள் பார்த்துக்கொண்டிருக்கின்ற எல்லாத் தேவர்களுக்கும் நடுவில் பகவானுடைய திருமார்பை அடைந்தாள்’ என்கிறபடியே, அமிர்தத்திற்காகக் கடைகிற காலத்தில் 3‘அம்மா நமக்கு இம்மார்பு பெறவேண்டும்’ என்று தன்பாடு ஏற வர, அவளையும் மார்பிலே வைத்துக் கொண்டவனுடைய திருவடிகளின்மேலே செறியத் தொடை உண்டு காட்சிக்கு இனியதாய்க் குளிர்ந்து செவ்வியையுடைத்தான திருத்துழாய்ப் பூவை ஆசைப்பட்டுக் கிடையாமையாலே சுருண்டு விழுந்து கிடவா நின்றாள். வாள் நுதலீர் - ஒளி பொருந்திய நெற்றியை உடையவர்களே! 4‘உங்களைப்போன்று இவளைக் காண்பது

_____________________________________________________

1. உலகத்திலே பிறந்த போது இளமைப்பருவமாய் இருந்து பின்பேயன்றோ
  போகத்திற்குத் தக்க பருவம் உண்டாவது? அங்ஙனன்றிக்கே பிராட்டியார்
  இருத்தலின், ‘எப்போதும் ஒக்க’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.
  ‘எக்காலமும் மடந்தையாய் இருப்பவள்’ என்றபடி.

2. ஸ்ரீவிஷ்ணு புரா. 1. 9 : 105.

  ‘வெருவு மாலமும் பிறையும்வெவ் விடையவற் கீந்து
   தருவும் வேறுள தகைமையும் சதமகற் கருளி
   மருவு தொல்பெரு வளங்களும் வேறுற வழங்கித்
   திருவு மாரமும் அணிந்தனன் சீதர மூர்த்தி.’

  என்பது கம்ப ராமாயணம்

(பால காண். வேள். 26.)

3. ‘அம்மா’ என்றது, சிலேடை : ‘ஸ்வாமி’ என்பதும், ‘அந்தத் திருமகள்’
  என்பதும் பொருளாம்.

4. ‘வாள் நுதலீர்’ என்று விளிப்பதற்கு பாவம், ‘உங்களைப் போன்று’ என்று
  தொடங்கும் வாக்கியம்.