முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
நான்காம் தொகுதி
 
95

360

360

        1‘கால சக்க ரத்தொடு
            வெண்சங் கம்கை ஏந்தினாய்!
        ஞால முற்றும் உண்டுஉமிழ்ந்த
            நாரா யணனே!’ என்றுஎன்று,
        ஓல மிட்டு நான்அழைத்தால்
            ஒன்றும் வாரா யாகிலும்,
        கோல மாம்என் சென்னிக்குஉன்
            கமல மன்ன குரைகழலே.

    பொ-ரை : ‘பகைவர்களுக்கு முடிவு காலத்தைச் செய்கின்ற சக்கரத்தையும் வெண்மையையுடைய சங்கினையும் திருக்கைகளிலே ஏந்தினவனே! பூமி முழுதினையும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்பதாகக் கூப்பிட்டு நான் அழைத்தால், சிறிதும் வாராமல் இருந்தாயேயாகிலும், உனது தாமரை மலர் போன்ற ஒலிக்கின்ற திருவடிகள் எனது தலைக்கு அலங்காரமாம்.

    வி-கு : ‘உன் கமலம் அன்ன குரைகழல் என் சென்னிக்குக் கோலமாம்,’ என்க. கோலம் - அழகு. ஒன்றும் - சிறிதும். எண்ணுப் பொருளுமாம்.

_____________________________________________________

1. இத்திருப்பாசுரக் கருத்தோடு

  ‘தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
  எம்மை நினையாது விட்டாரோ விட்டகல்க;
  அம்மென் இணர அடம்புகாள்! அன்னங்காள்!
  நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.’

  என்ற சிலப்பதிகாரச் செய்யுளின் ஈற்றடியும், (சிலப். கானல் வரி)

  ‘அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
  நீஎமக் காகா தது?’

  என்ற திருக்குறளும், (‘நெஞ்சமே! நம் தலைவர் நம்மை நினைத்து வந்து
  அருள் செய்யவில்லை; நீ மட்டும் ஏன் அவரையே நினைக்கின்றாய்?’
  என்பது திருக்குறளின் கருத்தாகும்.)

  ‘பெய்த குன்றத்துப் பூநாறு தண்கலுழ்
  மீமிசைத் தாஅய வீஇ சுமந்துவந்து
  இழிதரும் புனலும்; வாரார் தோழி,
  மறந்தோர் மன்ற; மறவாம் நாமே;
 
காலை மாரி மாலை மாமழை
  இன்னிசை உருமின முரலும்
  முன்வரல் ஏமஞ் செய்தகன் றோரே,’

  என்ற குறுந்தொகைச் செய்யுளும் (200) ஒத்து விளங்குதல் காண்க.