முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
208

இருக்கிறது” என்று, பெருமாள் என்னைப் பிரிந்த இடத்தில் என்னை அல்லது அறிந்திலர் என்று சொன்னது எனக்கு இனியதாயிருந்தது, அவர் பிரிவாலே தளர்கின்றார் என்று சொன்னபடியாலே வெறுப்பாய் இருந்தது என்றாளே அன்றோ. 1அப்படியே, இவர்க்கும் பிரீதி அப்ரீதிகள் சமமாகச் செல்லுகின்றன. 

487

        எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
        நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியைநான் கண்டபின்
        சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
        செங்கனிவாய் ஒன்றி னோடும் செல்கின்றது என்நெஞ்சமே.


    பொ-ரை :-
தாய்மார்களே! நீங்கள் என்னைக் கோவித்துக்கொள்வது எப்படி? நம்முடைய அழகிய திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் பார்த்த பிறகு, என்னுடைய நெஞ்சமானது, நம்பியின் திருக்கைகளிலே உள்ள சங்கோடும் சக்கரத்தோடும் தாமரை போன்ற திருக்கண்களோடும் சிவந்த கோவைக்கனி போன்ற ஒப்பற்றதாயிருக்கிற திரு அதரத்தோடும் செல்கின்றது. நான் என் செய்வேன்?

    வி-கு :-
நங்கள் என்பதில் ‘கள்’ அசைநிலை. “திங்களும் மறுவுமெனச் சேர்ந்தது, நங்கள் அன்பென நாட்டி வலிப்புறீஇ” என்றவிடத்து ‘நங்கள்:கள், அசை’ என்றார் நச்சினார்க்கினியர். (சிந். 1334.) நம்பி-பூர்ணன்.

    இத்திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

    ஈடு :-
முதற்பாட்டு. 2திருக்கைகளில் ஆழ்வார்களோடே சேர்ந்த நம்பி திருமுகத்தின் அழகிலே, என் நெஞ்சமானது மிகவும் ஈடுபடாநின்றது என்கிறாள்.

____________________________________________________

1. கூறிய விஷயத்தை முடித்துக் காட்டுகிறார் ‘அப்படியே’ என்று தொடங்கி.

2. பாசுரத்தின் பின் இரண்டு அடிகளையும் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார். ‘திருக்கைகளில்’ என்பதற்கு முன்னே, “தாய்மார்கள்
  மகளைப் பார்த்து ‘நீ இப்படிச் செய்கிறது பொருத்தமன்று’ என்று விலக்க,
  அவர்களைப் பார்த்து” என்ற சொற்றொடர் எஞ்சி நிற்கின்றது; அதனைக்
  கூட்டிப் பொருள் கொள்க.