முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
235

494

494

    கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
    மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
    செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
    மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.

   
பொ-ரை :- மிருதுத்தன்மை பொருந்திய முகத்தைக் கையுள்ளே வைப்பாள், வருந்துவாள் என்று தாய்மாராகிய நீங்களும் முனியா நின்றீர்கள்; மேகங்கள் தங்கியிருக்கின்ற மாடங்களையுடைய திருக்குறுங்குடியில் எழுந்தருளியிருக்கின்ற நம்பியை நான் கண்டபின், செந்தாமரை போன்ற திருக்கண்களும் அல்குலும் சிறிய இடையும் வடிவும் செறிந்த நீண்ட குழல் தாழ்ந்திருக்கின்ற தோள்களும் பாவியேனாகிய என்முன்னே நிற்கின்றன.

    வி-கு :-
மை-கருமையுமாம். அல்குல்-அரையின் கீழே இருப்பதோர் உறுப்பு; இருபாலார்க்கும் பொதுவானது. “அடியும் கையும் கண்ணும் வாயும், தொடியும் உந்தியும் தோளணி வலயமும், தாளும் தோளும் எருத்தொடு பெரியை, மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை” என்பது, பரிபாடல் 13. 51-54. மொய்ய நீள் குழலும் தாழ்ந்த தோள்களும் என உம்மைத் தொகையாகக் கோடலுமாம்.

    ஈடு :-
எட்டாம் பாட்டு. 1எல்லா இடத்திலும் உள்ள அங்க சோபை என்முன்னே நின்று நலியா நின்றது என்கிறாள்.

    கையுள் நன்முகம் வைக்கும் - அவனைப் பிரிகையால் வந்த தளர்த்தியாலே கையிலே முகத்தை வையாநின்றாள். 2இத்தனை சாகசத்திலே துணியும்படி ஆவதே இவள். 3தன்முகத்தின் வாசி தான் அறியாது ஒழிய வேணுமோ.

_____________________________________________________

1. திருப்பாசுரத்தின் பின் இரண்டு அடிகளையும் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. ‘இவள் கையையுங்கூடப் பொறாத இவள் முகத்தின் சௌகுமார்யத்தைத்
  திருவுள்ளம்பற்றி  ‘இத்தனை சாகசத்திலே துணியும்படி ஆவதே இவள்’
  என்கிறார்.

3. “நன்முகம்” என்று விசேடித்ததற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘தன்முகத்தின்
   வாசி’ என்று தொடங்கி.