முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
307

அற

அறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு எல்லா யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ. 1வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ. சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ. வையத் தேவர் - பூசுரர். அறாச் சிரீவரமங்கல நகர் கைதொழ இருந்தாய் - அவர்கள் நித்தியவாசம் செய்கிற ஸ்ரீ வரமங்கல நகரிலே அங்குள்ளவர்கள் அடிமை செய்ய, அதுவே தாரகமாக இருந்தாய். அது நானும் கண்டேன் - 2ஸ்ரீவைகுண்டத்தைக் கல விருக்கையாகவுடைய நாம் இங்கே வந்து உமக்காக இருக்க, ஒன்றும் செய்திலோமாகச் சொன்னீரே? என்ன, இருந்தாய், அதில் தடை இல்லை, நான் அநுபவித்த அம்சத்தை இல்லை செய்கிறேன் அல்லேன்; அநுபவித்த அம்சம் போராமல் படுகிறேன். என்றது, தேவர் செய்தருளின அம்சம் இவ்வளவு உண்டு, அதில் குறை இல்லை, எனக்கு அவ்வளவால் போராது என்கிறார் என்றபடி. திருவடிகளில் கைங்கரியமே யாத்திரையாகப் பெற வேண்டும் என்பது அவாய்நிலை.

(5)

514

ஏனமாய் நிலம் கீண்டஎன் அப்பனே! கண்ணா! என்றும்எனை ஆளுடை
வான நாயகனே! மணிமாணிக்கச் சுடரே!
தேன மாம்பொழில் தண்சிரீவர மங்க லத்தவர் கைதொழ உறை
வானமா மலையே! அடியேன்தொழ வந்தருளே.

   
பொ-ரை :- பிரளயம் கொண்ட நிலத்தை வராகமாகி எடுத்த என் அப்பனே! கண்ணபிரானே! எப்பொழுதும் என்னை அடிமையாக ஆளுகின்ற தெய்வ நாயகனே! அழகிய மாணிக்கத்தினது சுடரே! தேனையுடைய மாமரச் சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த ஸ்ரீவரமங்கலத்திலிருப்பவர்கள் கைகூப்பி வணங்கும்படியாக எழுந்தருளியிருக்கின்ற வானமாமலையே! அடியேன் வணங்கும்படி வந்தருள்வாயாக என்கிறார்.

_____________________________________________________

1. அர்த்த ஒளசித்தியத்தைக் காட்டுகிறார் ‘வேறு ஒன்று’ என்று தொடங்கி.

2. “நானும்” என்னும் உம்மையின் பொருளை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ
   வைகுண்டத்தை’ என்று தொடங்கி.