முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
32

னாகவே இருக்கிறான்” என்பது உபநிடதம். 1“யானோ தசரத சக்கரவர்த்தியிடத்தில் தகப்பன் என்ற முறையைப் பார்க்கிறேன் இல்லை; எனக்கு ஸ்ரீ ராமபிரானே தமையனும் சுவாமியும் உறவினர்களும் தமப்பனுமாக இருக்கிறார்” என்றார் இளைய பெருமாள்.

(8)

451

        ஆவார் ஆர் துணை? என்று அலைநீர்க் கடலு ளழந்தும்
        நாவாய் போல் பிற விக்கட லுள்நின்று நான்துளங்கத்
        தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
        ஆஆ! என்று அருள் செய்துஅடி யேனொடும் ஆனானே.


    பொ-ரை :-
துணை ஆவார் யார்? என்று, அலைகளையுடைய நீரையுடைய கடலிலே அழுந்துகின்ற கப்பலைப்போன்று, பிறவியாகிய பெருங்கடலுள் நின்று நான் நடுங்கிக்கொண்டிருக்க, தெய்வத் தன்மை பொருந்திய திருமேனியோடும் திருச்சக்கரத்தோடும் திருச்சங்கினோடும் அந்தோ! அந்தோ!! என்று இரங்கி வந்து அடியேனோடும் கலந்தான் என்கிறார்.

    வி-கு :-
நாவாய் என்றது, நாவாயிலுள்ளவர்களைக் குறித்தது. ஆகுபெயர். நான் துளங்க அருள்செய்து ஆனான் என்க. ஆஆ என்பன: இரக்கத்தைக் காட்டுகின்ற குறிப்பு இடைச்சொல்.

    ஈடு :-
ஒன்பதாம் பாட்டு. 2பலசொல்வதனால் பயன் என்? நான் சம்சாரத்தில் பட்ட கிலேசம் எல்லாம் தீரும்படி தன் கிருபையால் பிரகிருதி சம்பந்தம் இல்லாத வடிவோடே வந்து கலந்தான் என்கிறார்.

    துணை ஆவார் ஆர் என்று - துணை ஆவார் யார்? என்று. அலை நீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போல் பிறவிக்

_______________________________________________

1. “அஹம் தாவத் மஹாராஜே பித்ருத்வம் நோபல க்ஷயே
   பிராதா பர்த்தாச பந்துஸ்ச பிதாச மம ராகவ:”

  இது, ஸ்ரீராமா. அயோத். 58 : 31.

  நற்றா தை நீ தனிநா யகன் நீ வயிற்றிற்
  பெற்றாயும் நீயே பிறரில்லை பிறர்க்கு நல்கக்
  கற்றா யிது கா ணுதி இன் றெனக் கை மறித்தான்
  முற்றா மதியம் மிலைந்தான் முனிந்தானை அனான்.

  என்பது கம்ப ராமாயணம்.

2. நான்கும் ஐந்துமாகிய இரண்டு திருப்பாசுரங்கள் தவிர, மற்றைத்
  திருப்பாசுரங்களில் எல்லாம் தம்மோடே கலந்தமை சொல்லுகையாலே
  ‘பல சொல்வதனால் பயன் என்?’ என்கிறார். திருப்பாசுரம் முழுதினையும்
  திருவுள்ளம்பற்றி அவதாரிகை அருளிச்செய்கிறார்.