முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
40

ஏர

    ஏர் வளம் ஒண் கழனிக் குருகூர்-நிறைந்த ஏர்களையுடையதாய் அழகியதான வயலோடே கூடின திருநகரி. ‘வளம்’ என்று மிகுதிக்கும் அழகுக்கும் பேர். இங்கு மிகுதியைச் சொல்லுகிறது. சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் - 1சீரியதான பிரகாரத்தையுடைய அழகிய தமிழ் என்னுதல்; கவிக்கு உறுப்பான 2சீரையும் வண்ணத்தையுமுடைய அழகிய தமிழ் என்னுதல். ‘சீர்’ என்பது, செய்யுளில் ஏக தேசம். வண்ணம்-ஓசை. ஆர் வண்ணத்தால்-நிறைவாக என்னுதல். ஆர்தல்-பருகுதலாய், 3“தொண்டர்க்கு அமுது உண்ண” என்கிறபடியே, பருகுவாரைப் போலே என்னுதல். என்றது, மிக்க ஆசையோடு உரைத்தலைக் குறித்தபடி. பொலிந்தே அடிக்கீழ்ப் புகுவார் - 4நம்பிக்கை மாத்திரமேயாய் ருசி இன்றிக்கே இருக்கப் போய்ப் புகுதல் அன்றிக்கே, எம்பெருமானாரைப் போலே நூறு ஆண்டுகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீயோடே இருந்து, பின்பு தாய் நிழலிலே ஒதுங்குவாரைப் போலே அவன் திருவடிகளிலே புகப்பெறுவர்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        கையாரும் சக்கரத்தோன் காதலின்றிக்கே இருக்கப்
        பொய்யாகப் பேசும் புறனுரைக்கு - மெய்யான
        பேற்றை உபகரித்த பேரருளின் தன்மைதனைப்
        போற்றினனே மாறன் பொலிந்து.

(41)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

___________________________________________________

1. ‘சீரியதான பிரகாரம்’ என்றது, ஆழ்வார், பிரபந்தம், பிரபந்தத்தில்
  சொல்லப்பட்ட பொருள் இவற்றினுடைய சீர்மையைக் குறித்தபடி.

2. ‘சீர்’ என்றது, ஓரசைச் சீர், ஈரசைச் சீர், மூவசைச் சீர், நாலசைச் சீர்
  என்பனவற்றை. ‘வண்ணம்’ என்றது “தாஅவண்ணம்” முதலான இருபது
  வண்ணங்களை.

3. திருவாய். 9. 4 : 9.

4. “பொலிந்து” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நம்பிக்கை
  மாத்திரமேயாய்’ என்று தொடங்கி. ‘நம்பிக்கை மாத்திரமேயாய்’ என்றது,
  ‘பேறு தப்பாது’ என்று நம்பிக்கை மாத்திரமேயாய் என்றபடி.