முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
463

    நின்ற வாறும் - இலங்கையின் வாசலிலே கையும் வில்லுமாய் நின்றபடியாதல், வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய் நின்றபடியாதல்; 1“கம்பீரமான வில்லைப் பிடித்துக்கொண்டு நிற்கின்ற ஸ்ரீ ராமபிரானையும் இளையபெருமாளையும் தன் கணவனுக்குத் தம்பியாகிய சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரை கண்டாள்” வாலி வதம் பண்ணிக் கையும் வில்லுமாய்க்கொண்டு வென்றி புனைந்து நின்ற பெருமாளையும், அவரை இடுவித்துக் கொல்லுவித்த தம்பியாரையும், இருவரையும் தொடர்ந்து பின்பற்றி முடிசூட இருக்கிற மஹாராஜரையும் கண்ட இவள் ‘நமக்குப் பகைவர்கள்’ என்றிராமல், நல்ல மனமுடையவளானாள் அவர்பக்கல் சாங்கத்தாலே. 2இனித்தான், தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே கல்லைக் கட்டிக்கொண்டு விழுந்து முடிந்துபோவாரைப் போலே கொடிய தன்மையனானவாறே முடிந்துபோனான் வாலி; இவர் செய்த குற்றமுண்டோ? என்று இருந்தாள். அவர் தம் உயிர் நிலையிலே நலிந்தாரை விட்டு வைப்பரோ.

    இருந்தவாறும்-3“பர்ணசாலையில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ ராமனை” என்று இருந்த இருப்பும், கிடந்தவாறும்-

____________________________________________________

1. இரண்டாவதாக அருளிச்செய்த பொருளுக்குப் பிரமாணம் காட்டுகிறார்
  ‘கம்பீரமான’ என்று தொடங்கி.

  “அவஷ்டப்ய ச திஷ்டந்தம் ததர்ச தநுரூர்ஜிதம்
   ராமம் ராமாநுஜம் சைவ பர்துஸ்சைவ அநுஜம் ஸுபா”

  என்பது, ஸ்ரீராமா. கிஷ்காந். 19 : 25.

      எடுத்த சுலோகத்திற்குப் பொருள் அருளிச்செய்கிறார். ‘வாலிவதம்
  பண்ணி’ என்று தொடங்கி. ‘அவரை இடுவித்துக் கொல்லுவித்த
  தம்பியாரையும்’ என்றது, புருஷகாரமாயிருந்தமையைத் தெரிவித்தபடி.
  ‘சாங்கத்தாலே’ என்றது, சிலேடை: அன்பும், வில்லும் என்பது பொருள்.

2. கையும் வில்லுமான அழகைக் கண்டு சாங்கத்தாலே நல்லெண்ணம்
  வாய்ந்த மனமுடையவளானாள் என்று மேலே அருளிச்செய்து,
  அடியார்களிடத்துள்ள பக்ஷபாதமான குணத்தை அநுசந்தித்தலாலும்
  நல்லெண்ணம் வாய்ந்த மனமுடையவளானாள் என்று வேறும் ஒரு கருத்து
  அருளிச்செய்கிறார் ‘இனித்தான்’ என்று தொடங்கி.

3. “உடஜே ராமம் ஆஸீநம் ஜடாமண்டல தாரிணம்”


  என்பது ஸ்ரீராமா. அயோத். 99 : 25.