முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஐந்தாம் தொகுதி
 
84

சிரத்தை இல்லாத போது அந்தப் பக்தி தவிரலாயிருக்கும். பிரபந்நனுக்கு ஸ்வரூபத்தோடு கூடியதாய் வருமதாகையாலே ஒருகாலும் தவிராததாயிருக்கும்.

465

        மாசறு சோதிஎன் செய்யவாய் மணிக்குன் றத்தை
        ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
        பாசற வெய்தி அறிவி ழந்துஎனை நாளையம்
        ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?

   
பொ-ரை :- தோழீ! அழுக்கு நீங்கிய ஜோதி சொரூபமானவனும் சிவந்த வாயினையுடைய மாணிக்கமலை போன்றவனும் குற்றம் நீங்கிய சீலத்தையுடையவனும் காரணனாயிருக்கின்ற மூர்த்தியுமான எம்பெருமானை விரும்பியதனால், சரீரத்திலுள்ள பசுமைநிறம் நீங்கப் பெற்று அறிவும் நீங்கி எத்தனை காலத்தேமாயினோம்; ஊராருடைய பழிச்சொல் நம்மை என் செய்யும்? என்கிறாள்.

    வி-கு :-
சோதியும் குன்றமும் சீலனும் மூர்த்தியுமான எம்பெருமான் என்க. நாடி-நாடியதனால். எனை-எத்தனை. நாளையம்-நாட்களையுடையேம். கவ்வை-ஒலி; பழிச்சொல்.

    இத்திருவாய்மொழி, கலி நிலைத்துறை.

    ஈடு :-
முதற்பாட்டு. 1“அழகாலும் சீலத்தாலும் மதிப்பாலும் பழிப்பு அற்றது ஒரு விஷயம் ஆயிற்று அது, நீ

_____________________________________________________

1. “மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை ஆசறு சீலனை ஆதி
  மூர்த்தியை” என்றதனைக் கடாக்ஷித்து ‘அழகாலும் சீலத்தாலும் மதிப்பாலும்
  பழிப்பற்றது ஒரு விஷயத்தை’ என்கிறார். அழகால் பழிப்பற்ற ஒரு
  விஷயத்திற்குப் ‘பழிப்பை உண்டாக்குதலாவது, ‘தலைவனானவன் தலைவி
  பக்கலிலே மிக்க காதலையுடையவனாகையாலே, தானே மேல் வீழ்ந்து தன்
  அழகினைத் தலைவி அநுபவிக்கும்படி செய்ய வேண்டி இருக்க, அது
  செய்யாதே, தலைவியானவள் மடல் எடுக்கப் புகுகிறேன் என்று கூறும்
  அளவு தாழ்த்தபோதே அழகு பயன் அற்றதாய் விட்டது’ என்று நாட்டார்
  சொல்லுவார்கள் அன்றே, அவ்வழியாலே அழகிற்குப் பழிப்பினை
  உண்டாக்கியவாறு காண்க. ஏனை இரண்டனையும் இங்ஙனமே விரித்துக்
  கொள்க. ‘பழிப்பை அறுக்கப் புகுகிறேன் காண்’ என்றது, “மாசறு”, “ஆசறு”
  என்று விசேடிக்கையாலே, சித்தம். மடல் எடுத்தால் அழகு முதலானவை
  பழிப்பு அறுதல் யாங்ஙனம்? எனின், எல்லா வகையிலும் சிறந்தவளான
  இவள் மடல் எடுக்கப் போகிறேன் என்று சொன்ன போதே அவனுடைய
  அழகு அளவிடற்கு அரியது என்று நாட்டார் எண்ணுவராதலானும், மடல்
  எடுப்பேன் என்று