முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
144

பார்ப்பது கடைக்கண்ணாலேயன்றோ? 1எங்ஙனே பாராதே இருந்து சிற்றில் இழைத்தார்கள்தாம்!

(9) 

573.

நின்றிலங்கு முடியினாய்! இருபத்தோர்கால் அரசு களை கட்ட
வென்றி நீள் மழுவா? வியன்ஞாலம் முன்படைத்தாய்!
இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத் தோன்றிய கருமாணிக்கச்சுடர்!
நின்றன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே.

    பொ-ரை :- நிலைபெற்று விளங்குகின்ற கிரீடத்தையுடையவனே! இருபத்தொருபடிகால் அரசர்களைக் குலத்தோடு வேர் அறுத்த வெற்றி பொருந்திய நீண்ட மழு என்னும் ஆயுதத்தையுடையவனே! அகன்ற உலகத்தையெல்லாம் முன்னே உண்டாக்கினவனே! இக்காலத்திலும் இந்த ஆயர் குலமானது அடியோடு உய்வுபெறும்படியாகத் தோன்றிய கரிய மாணிக்கச் சுடரே! ஆய்ச்சியர்களாகிய நாங்கள் எப்பொழுதும் உன்னால் துன்பமே படுகின்றோம்.

   
வி-கு :- களைகட்டல் - களைபிடுங்குதல். ‘மழுவா’ என்றது, பரசுராமனை. குலத்தை - குலமானது; உருபு மயக்கம். வீடு உய்ய - விடுபட்டு உய்ய என்னலுமாம்; மோக்ஷத்தைப் பெற்று உய்வுபெற என்னலுமாம். ஆய்ச்சியோம் நலிவே படுவோம் என்க.

   
ஈடு :- பத்தாம்பாட்டு. 2“நின் முக ஒளி திகழ முறுவல் செய்து நின்றிலையே” என்று விழுக்காடு அறியாதே வாய் தப்பச் சொல்லிக்கொண்டு நின்றார்கள்; காலால் அழித்தது சிற்றிலையன்று; இவர்கள் நெஞ்சுகளிலுள்ள மறத்தையே யன்றோ. அந்த மறம் போனவாறே மேல்நோக்கிப் பாதாதி கேசாந்தமாகப் பார்த்தார்கள்; தங்களை வென்றதனால் உண்டான உவகை வடிவிலே தோற்றும்படி நின்றான்; அவ்வடிவிலே பிறந்த வேறுபாட்டினைச் சொல்லுகிறார்கள்.

 

1. வியாக்கியாதாவின் ஈடுபாடு, ‘எங்ஙனே’ என்று தொடங்கும் வாக்கியம்.

2. பாசுரமுழுதினையும் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  ‘விழுக்காடு அறியாதே’ என்றது, மேல் புணருமதனை அறியாமலே
  என்றபடி. வாய்தப்பச் சொல்லுகைக்குக் காரணத்தை அருளிச்செய்கிறார்
  ‘காலால் அழித்தது’ என்று தொடங்கி. ‘அந்த மறம் போனவாறே’ என்று
  தொடங்கிப் பாசுரத்துக்கு அவதாரிகை அருளிச்செய்கிறார்.