முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

685

104

திருவாய்மொழி - ஏழாம் பத்து

                685

        வெள்ளைச் சுரிசங்கொடு ஆழிஏந்தித்
             தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே
        புள்ளைக் கடாகின்ற ஆற்றைக்காணீர்!
             என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்!
        வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
             வேத ஒலியும் விழாவொலியும்
        பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும்
             அறாத்’திருப் பேரெயிற் சேர்வன்நானே.

   
பொ-ரை : தாய்மார்களே! வெண்ணிறத்தையும் உள் சுரிந்திருத்தலைமையுடைய ஸ்ரீபாஞ்சசன்யம் என்னும் சங்கோடு சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் ஏந்திக்கொண்டு தாமரைக்கண்ணனான எம்பெருமான் என் மனத்திற்குள்ளே கருடப்பறவைச் செலுத்துகின்ற விதத்தைக் காணுங்கோள்; அவன் தன்மையை என்ன வார்த்தைகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லுவேன்! பேரின்ப வெள்ளத்தையுடைய எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற, வேதங்களின் ஒலியும் திருவிழாக்களின் ஒலியும் குழந்தைக் கூட்டங்கள் விளையாடுகிற விளையாட்டின் ஒலியும் நீங்காமல் இருக்கின்ற திருப்பேரெயில் என்ற திவ்விய தேசத்தை நான் அடைவேன் என்கிறாள்.

    வி-கு :
சுரிதல் - உள்ளே சுழித்திருத்தல், கடாவுதல்-ஏறிச்செலுத்தல். காணீர் -காண்கின்றிலீர் என்னலுமாம். வீற்றிருந்த திருப்பேரெயில் என்க. ‘ஒலியும் ஒலியும் விளையாட்டுஒலியும் அறாத்திருப்பேரெயில்’ என்க.

    இத்திருவாய்மொழியில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

    ஈடு :
முதற்பாட்டு. 2இந்தப் பிராட்டி, சொற்களால் சொல்ல முடியாதபடி தனக்கு உண்டான வியசனத்தாலே, தென்திருப்பேரெயில் போகவேணும் என்று தனக்குப் பிறந்த நிலைய் வினவுகிற திருத்தாய்மார்க்குச் சொல்லுகிறாள்.

_____________________________________________________________

1. ‘திருப்பேரையில்’ என்பதும் பாடம். ‘திருப்பேரெயில்’ என்பதே
  கொள்ளத்தக்கது (பாசுரம் 691 பார்க்க).

2. ‘என் சொல்லிச் சொல்லுகேன், திருப்பேரெயில் சேர்வன் நான்,
  அன்னைமீர்காள்!’ என்பதனைக் கடாட்சித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.