முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

New Page 1

முதல் திருவாய்மொழி - பா. 5

25

செவ்விப்பூச் சூடாமல் தடுப்பாரைப் போலே’ என்றபடி. போதி கண்டாய் - 1கூட நிற்கில் இவை எல்லாம் பட வல்லேன்காண்! 2‘கூடநிற்கில் கண்ணோட்டம் பிறக்கும்’ என்று கடக்கப் போவாரைப் போலே போனாள். ‘நீர் சொல்லுகிறவை எல்லாம் நமக்குச் செய்ய அரிதுகாணும்’ என்ன, 3‘ஓம்; நீ அரியவை செய்யமாட்டாய் அன்றோ?’ என்கிறார் மேல். யாது யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி ஓர் ஆலின் நீள் இலை மீது சேர் குழவி - அறிவில் பொருள் அறிவுடைப்பொருள் என்னும் இவற்றில் ஒன்றும் பிறிகதிர்ப் படாத படி உன் வயிற்றிலே வைத்து, ஒருபவனாய் முகிழ் விரியாதது ஓர் ஆலந்தளிரின்மேலே, 4உனக்கு இரட்சகர் வேண்டுவது ஒரு நிலையை அடைந்து திருக்கண் வளர்ந்தருளுவான் ஒருத்தன் அல்லையோ? 5அரியவை செய்ய வல்லை என்னுமிடத்துக்கு ஒரு பழங்கதை சொல்லவேணுமோ? வினையேன் வினைதீர் மருந்தே - பாபமே நிரூபகமான என்னுடைய பாபத்தைப் போக்கும் மருந்தாம் வல்லவனே! என்னுடைய ஐம்புல இன்பங்களில் உண்டாகும் ஈடுபாட்டினைப் போக்கி என்னை இப்படித் துடிப்பித்தவன் அல்லையோ?

(4)

                   667 

        தீர்மருந் தின்றி ஐவர் நோயடும்
             செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை
        நேர்மருங் குடைத்தா அடைத்து
             நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்
        ஆர்ம ருந்தினி யாகு வார்!அட லாழி
             ஏந்தி அசுரர் வன்குலம்
        வேர்மருங் கறுத்தாய்! விண்ணு
             ளார்பெரு மானேயோ!


    பொ-ரை:
கொல்லுகின்ற சக்கரத்தை ஏந்தி வலிய அசுரர்களுடைய குலத்தைப் பக்கவேரோடு அறுத்தவனே! நித்தியசூரிகளுக்குப் பெருமானே! வேறு பரிகாரம் இல்லாதபடி ஐம்புலன்களாகிய நோய்கள் வருத்துகின்ற சரீரமாகிற செக்கிலே இட்டு மயங்கச்

_______________________________________________________________

1. ‘போதிகண்டாய்’ என்பதற்குக் கருத்து அருளிச்செய்கிறார், ‘கூட நிற்கில்’
  என்று தொடங்கி.

2. ‘அவன் தான் கூட நில்லாமல் போவான் என்?’ என்ன, ‘கூட நிற்கில்’ என்று
  தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

3. ‘ஓம்’ என்பது, உடன்பாட்டைக் காட்டுவது.

4. ‘குழவி’ என்றதற்குப் பொருள், ‘உனக்கு இரட்சகர் வேண்டுவது’ என்று
  தொடங்கும் வாக்கியம்.

5. ‘வினையேன் வினைதீர் மருந்தே’ என்றதற்கு அவதாரிகை அருளிச்செய்கிறார்,
  ‘அரியவை’ என்று தொடங்கி.