முகப்பு

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
ஏழாம் தொகுதி

90

திருவாய்மொழி - ஏழாம் பத்து

இமை கொட்டாதே இருக்கும் என்னலுமாம். அன்றிக்கே 1பின்னையும் தோற்றக் காணாமையாலே, ‘நான் உன்னைக் காணும் விரகு ஏது?’ என்னும் என்னுதல். செழுந்தடம் புனல் சூழ் திருவரங்கத்தாய் - அழகியதாய்ப் பெருத்த நீர் சூழ்ந்த கோயிலை இடமாகவுடையவனே! இப்படிச் சிரமத்தைப் போக்கக்கூடிய தேசத்திலே நீர் வந்து சாய்ந்தது இவள் வரவு பார்த்தன்றோ? அத்தலை இத்தலை ஆயிற்றோ? 2என் செய்கேன் - ‘செய்யவேண்டுவன அனைத்தையும் தானே செய்தாள், நான் இனிச் செய்வது என்? அன்றிக்கே, வேறு உபாயங்களால் சாதித்துக்கொள்ளத் தக்கதோ உம்முடைய தரிசனம்?’ என்னுதல். என் திருமகட்கே - 3இவளை இழக்கலாமோ உமக்கு? உம்மை ஒருவரையும் ஆசைப்பட்ட ஏற்றமன்றோ அவளது? உம்மையும் அவளையும் சேர ஆசைப்பட்ட ஏற்றமுடையவள் அல்லளோ இவள்? 4சாக்ஷாத் லக்ஷ்மியோடு ஒக்கச் சொல்லலாம் அன்றோ இவளை!

(8)

                    682 

        ‘என்திரு மகள்சேர் மார்பனே!’ என்னும்;
             ‘என்னுடைய ஆவியே!’ என்னும்;
        ‘நின்திரு எயிற்றால் இடந்துநீ கொண்ட
             நிலமகள் கேள்வனே!’ என்னும்;
        ‘அன்றுரு ஏழும் தழுவி நீ கொண்ட
             ஆய்மகள் அன்பனே!’ என்னும்;
        தென்திரு அரங்கம் கோயில்கொண் டானே!
             தெளிகிலேன் முடிவுஇவள் தனக்கே

________________________________________________________________

1. ‘எங்ஙனே நோக்குகேன்?’ என்றதற்கு, வேறும் ஒரு பொருள்
  அருளிச்செய்கிறார். ‘பின்னையும்’ என்று தொடங்கி. என்றது. பின்னையும்
  தோற்றக் காணாமையாலே, ‘சாதனத்தை அநுஷ்டிக்க வேண்டும்’ என்று
  வாராதிருக்கிறான் என்று பார்த்து, ‘நான் உன்னைக் காணும் விரகு ஏது?’
  என்னும் என்றபடி.

2. ‘என்செய்கேன்?’ என்றதற்கு இரண்டு  கருத்து அருளிச்செய்கிறார்:
  ‘சாதனத்தை அநுஷ்டிக்க வேண்டாவோ?’ என்கிற சங்கையிலே
  இரண்டாவது கருத்தினை அருளிச்செய்கிறார், ‘வேறு உபாயங்களால்’
  என்று தொடங்கி.

3. ‘என் திருமகள்’ என்றதற்குப் பிராட்டியினின்றும் வேறுபடுத்தி, பாவம்
  அருளிச்செய்கிறார், ‘இவளை’ என்று தொடங்கி. அந்த வேறுபாட்டினைக்
  காட்டுகிறார். ‘உம்மை’ என்று தொடங்கி.

4. ‘திருமகள்’ என்றதற்கு பாவம், ‘சாக்ஷாத்’ என்று தொடங்கும் வாக்கியம்.