பக்கம் எண் :


102 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
இயலாது என்க. நல் அரசின்கீழ் வாழ்வதே எல்லாப் பெருமைகளையும் ஒரு
நாட்டுக்கு மிக்க பெருமையாம் என்பது கருத்து.

“கொடுங்கோ லரசன் வாழு நாட்டிற்
கடும்புலி வாழுங் காடு நன்றே”

என்றபடி ஒரு நாடு காட்டின் தன்மை நீங்கி, நாடு எனத்தக்கதற்கு
நல்வேந்தனே காரணமாம் என்பர் ஆன்றோர். இச்சிறப்பிலே மேலே காட்டிய
நீர்ச்சிறப்பு - நிலச் சிறப்பு - குடிச் சிறப்பு - ஒழுக்கச் சிறப்பு - ஓதற் சிறப்பு
- மனைச்சிறப்பு - மக்கட் சிறப்பு - அறச் சிறப்பு - சைவச் சிறப்பு - முதலிய
எல்லாச் சிறப்புக்களாலும் வரம்புற விளம்பிய பெருமை பெற்றதன்றி, இந்நாடு
அநபாயர் குடை நிழலிலே குளிரும் பெருமையும் பெற்றதுவே அதற்குச்
சொல்ல அளவுபடாத பெருமையைத் தந்ததென்பார், “வரம்புற விளம்பல்
ஆமோ?” என்று எதிர்மறை வினாவினாற் கூறினார். ஒகாரம் எதிர்மறைப்
பொருளில் வந்தது.

“ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு”

என்ற குறளும் காண்க. சோழர் நாட்டின் சிறப்பைச் சோழர் ஆட்சியின்
சிறப்புடன் முடித்துக் காட்டியவாறு.

     வரைப்பினோங்கும் - என்பதும் பாடம்.                 35

     திருநாட்டுச் சிறப்பு - இது திருமலைச் சருக்கத்தின் இரண்டாவது
பகுதி. சோழநாட்டின் சிறப்பியல்புகளை உரைக்கும் பகுதி என்பது பொருள்.
திருமலைச் சிறப்பின் இறுதியிற் கூறியவை காண்க.

     சுருக்கம் :- இப்பகுதியிற் சோழர்களது காவிரி நாட்டின் செழிப்பும்,
சிறப்பும் கூறப்பெற்றது. வடக்கில் இமயமலையிலிருந்து தெற்கே வந்த
அகத்தியர் கமண்டலத்திற்கொண்டுவந்த நீர், அக்கமண்டலம் கவிழ்க்
கப்படக், கொங்கு நாட்டிற்கு அருகிலே பெருகிக் காவிரியாய் ஓடிற்று. அது
சோழநாட்டிற் பாய்ந்து அந்நாட்டை வளஞ் செய்யும். அதன் புதுநீர்
வயல்களிற் புகப்பெறுதலால் நாற்று நடுதல் முதலிய உழுவுச் செயல்களை
அந்நாட்டு உழவர், உழத்திகள் மகிழ்ச்சியுடன் செய்து விளைவுப்போகம்
பெறுவர். நெல் அந்நாட்டுச்சிறந்த விளைபொருளாம். கரும்பும், வாழையும்
கமுகும் மலிந்து விளைவன. பூஞ்சோலைகளும், பழச்சோலைகளும்,
மரச்சோலைகளும் விளங்கும். மக்கள் மனையறத்தில் மகிழ்ந்து வாழ்ந்தனர்.
அறநூல் விதித்த விதி விலக்குகளை அறிந்த நல்லொழுக்கத்தினால்
வாழ்ந்தனர். இறைவன் கோயில்களின் பூசையும், மக்கள் திருவைந்தெழுத்து
ஓதுதலும் சிறப்பாய்ப் பெருகுதலால் அந்நாடு, பிணி முதலிய
கொடுமைகளின்றிச் சுகம் பெற்றிருந்தது. இந்நாடு அநபாயச் சோழரது இனிய
ஆட்சியிற் குளிர்ந்து வாழ்ந்தது.

     கற்பனை :- 1. விளைந்த நெற் கதிர்களைப் பார்த்த ஆசிரியர்
அவற்றை அன்பு நிறைந்த சிவனடியாராகக் கண்டதுபோல, உலகத்தில்
எங்கும் சிவமயமாகப் பார்த்தறியும்படி நம் மனத்தைப் பழக்க வேண்டும்
என்பது முன்னர்க் குறிக்கப் பெற்றது.

     2. குடிகள் தங்கட்குக் கிடைக்கும் விளைவில் முதலில் அரசர் கடன்
கொடுத்துப், பின் அவ்விடத்தே களவேள்வி முதலிய தருமங்கள் செய்து,
எஞ்சியதை ஐந்து பங்காக்கி, அதில் ஒரு பங்குமட்டும் தம் அனுபவத்திற்கு
எடுத்துக் கொள்ளத்தக்கவர் என்ற தருமநூல் விதி உணர்ந்து பின்பற்றத்
தக்கது. இவ்வாறு மக்கள் ஒழுகினால் இக்காலத்துக் கேட்கப்படும்
எவ்விதமான பொருளாதாரச் சங்கடங்களும் தலையெடுக்க மாட்டா.

     3. விழாக்களும் - சிவ யாகங்களும் - மரபுகளும் - ஒழுக்கங்களும் -
மனையறவாழ்க்கை மகிழ்ச்சிகளும் விதிப்படி மல்கி நிலவுதல் நாட்டுக்கு
நலம்செய்வன.