பக்கம் எண் :


பாயிரம் 11

Periya Puranam
     கடல் ஊற்று உண் பெருநசை - சிறு ஊற்றை உண்டு வற்றச்செய்து
விடுவது போலக் கடலாகிய இதனையும் (ஊற்றுக்காண) உண்டு வற்றச்செய்து
விடுவோம் என்ற பேராசை. சிறிது சிறிதாக நக்கி உண்பதல்லாமல் ஒரு சேர
உண்ண முடியாததால் நாயைக் கூறியவாறு. பேராசையும் அதனாலே
விளங்கும். மேற்பாட்டில் அளவில் ஆசை என்றமை காண்க. இதனையே
கம்பர் “பூசை முற்றவும் நக்குபு புக்கென” என்றமை காண்க.


     ஒரு சுணங்கனை ஒக்கும் தகைமையேன் - சுணங்கன் - நாய். நாயை
ஒக்கும் தன்மையுடையேன். நாயைப்போல என்று உவமித்தார். கட்டுப்பட்ட
காலம் தவிர மற்றைக் காலத்திலே மலமருந்துதல் முதலிய துர்க்குணமுடையது
நாய். மனிதர், நற் கூட்டத்தின் நீங்கிய உடன் இழி செயல் செய்வார்;
நாயாயிருந்தால் அந்த இழி குணம் அதன் இயல்பென்பர்; நாய்
அல்லாதிருந்தும் அதுபோன்ற இழிகுண முடைமை மிக்க இழிவு என்பதாம்.

     தெரிவரும் பெருமை - பின்னர்த் திருக்கூட்டச் சிறப்பில் காண்க.
“மண்பா தலம்புக்கு.....”; “வானந்துளங்கிலென்......”; “எங்கெழிலென் ஞாயிறு”
“வடகோ டுயர்ந்தென்ன.......” முதலிய திருவாக்குக்களிலும் காண்க.

     தொண்டர் - தொண்டு செய்வோர். இறைவனுக்கும் அடியார்க்கும் பல
வகையாலும் அடிமைசெய்தலைத் தவிர வேறு ஒரு செயலும் செய்யாதவர்.

     தண்கடலூற்றும் என்று பாடமாயின், ஊற்றும் - கவிழ்க்கும்
எனப்பொருள்கொள்க. கடலையே கவிழ்க்கும் பேராசை என்க.   6

7. செப்ப லுற்றா பொருளின் சிறப்பினால்
 
  அப்பொ ருட்குரை யாவரும் கொள்வரால்
இப்பொ ருட்கென் னுரைசிறி தாயினும்
மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்.
7

     (இ-ள்.) செப்பல்......சிறப்பினால் - சொல்லற் பெறப்படும் பொருள்
சிறந்ததானால், அதனைச் சொல்லும் சொல் சிறந்ததல்லாவிட்டாலும் அதுபற்றி
யிகழாது, பொருளின் சிறப்பையே நோக்கி; அப்பொருட்கு...கொள்வர் ஆல் -
அப்பொருளைச் சொல்லும் சொல்லை யாவர்களும் கைக்கொள்வர்;
(அதுபற்றியே) இப்பொருட்கு....ஆயினும் - இதனுள்ளே குறித்த அடியார்களது
வரலாறும் பண்புமாகிய பெரும் பொருளுக்கு எனது சொல் சிறிதேயானாலும்;
மெய்ப் பொருட்கு....மேன்மையால - உண்மைப் பொருளையே உணரும்
உரிமையுடைய பெரியோர் இதனை அந்த மேன்மை பற்றிக் கைக்கொள்வர்.

     (வி-ரை.) இப்பாட்டில் முதலிரண்டடிகளிற் கூறியது ஒரு பொது
உண்மை; அவ்வுண்மையைப்பற்றிப் புன்உரையும் கொள்வர் என்று
அவைஅடக்கம் கூறியவாறு.


     செப்பலுற்ற பொருள் - ஒருவன் சொல்லப் புகுந்த பொருள்.
இவ்வாறன்றித்“தம்பொருள் என்ப தம்மக்கள” - (குறள்) என்றதிற்போலப்
பொருள் என்பதை மக்கள் என்று கொண்டு, மக்களின் சிறப்பு நோக்கி அவர்
வாயில் உரைக்கும் பாச்சி - சோச்சி முதலிய உரையும் கொள்ளுவர்
என்றுரைப்பாரு முளர்.

     மெய்ப்பொருட்கு உரியார் - உண்மை காணும் விருப்புடைய
பெரியோர். பிறர் (பொய்ப்பொருள் கருதுவோர் முதலிய பிறர்)
கொள்ளாவிடினும் இவர் கொள்வர் என்க. மெய்ப்பொருள் - இறைவன்
எனக் கொண்டு, அவனுக்குரியார்; அவனது அடியார் என்றலுமாம்.

     “தம்மை யுணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்; எம்மை யுடைமை
எமையிகழார்
- தம்மை, உணரார் உணரார் உடங்கியைந்து தம்மிற்,
புணராமை கேளாம் புறன்” என்பது - சிவஞானபோதம்.