பக்கம் எண் :


188 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
“..........................................இதுபாலிசூழ்
நாடு செய்ததவம்! நீடு குன்றைவள நகரி செய்ததவம்! நிகரிலாப்
பீடு செய்தபகி ரதிகு லத்திலகர் சேக்கிழார்செய்த பெருந்தவம்!“

என்ற உமாபதி சிவாசாரிய சுவாமிகள் திருவாக்கும் காண்க.

     வளம்பதி - நாட்டிற் கேற்றபடி பதிதானும் வளங்களையுடையது.

     வாய்மை குன்றாமை - மறையவர் குணங்களில் இது சிறந்ததாம்.
வேதத்தில் விதித்த “தருமம் சர - சத்யம்வத“ என்ற இருதருமங்களில் ஒன்று.
பின்னர் இப்பகுதியிலே நம்பிகளது திருமணம் இறைவனால் தடுக்கப்பெற்ற
சரிதத்திலே மறையவர்களின் குண மேன்மையில் வைத்து இதனைக்
கண்டுகொள்க. சரிதப் பின்னிகழ்ச்சியைக் குறிப்பிக்கவே இந்த
அடைமொழியாலே மறையவர்களைச் சிறப்பித்தனர்.

     நீடும் - என்றும் நிலைத்து வளர்ந்திருப்பதற்கு இடமாகிய.

     திருநாவலூர் - திருமுனைப்பாடி நாட்டின் அரசர்கள் வாழ்தற்குரிய
தலைநகரங்களில் ஒன்று. இத்தல விவரங்கள் (பின்னர்) வரிசை 224-ம்
பாட்டின் கீழ்க் காண்க. 2

149. மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்  
  வேதியர் குலத்துட் டோன்றி மேம்படு சடைய
                                 னாருக்
கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி
                                யார்பாற்
றீதகன் றுலக முய்யத் திருவவ தாரஞ் செய்தார்.
3

     (இ-ள்.) மாதொரு........தோன்றி - உமாதேவியாரை ஒருபாகத்தில்
வைத்த சிவபெருமானுக்கு வழிவழியாக அகம்படித்தொண்டுசெய்யும்
சிவமறையோர் மரபிலே தோன்றியவராய்; மேம்படு.......செய்தார் - மேம்பட்டு
விளங்கிய சடையனாருக்குக் குற்றமற்ற கற்புடைய இல்வாழ்க்கைக்குரிய
மனைவியாராகிய இசை ஞானியார் திருவயிற்றினிடமாக உலகம் தீமை
நீங்கவும் உய்தி பெறவும் திருவவதாரம் செய்தருளினார் (ஓலைகாட்டி
ஆண்டவர்).

     ஓலை காட்டி யாண்டவர் என்ற எழுவாய் வருவித்துரைக்க.

     (வி-ரை.) மாதொரு.....தலம் - இதுவே ஆதிசைவமரபு.
சிவப்பிராமணர் என்பார் இவர்களே. இவர் இன்றைக்கும் திருக்கோயிற்
பூசையாகிய அகம்படித் திருத்தொண்டு தவிர வேறு தொழில் செய்யாமை
காண்க. இவர்களைப்பற்றிச் “சிவமறையோர் திருக்குலத்தார், அருவிவரை
வில்லாளிக்கு அகத்தடிமையா மதனுக், கொருவர்தமை நிகரில்லார்“ என்றும்,
“தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுநாள்“ என்றும் புகழ்த்துணை
நாயனார் புராணத்திலேயும், (வரிசை 4127 - 4128)

“எப்போது மினியபிரா னின்னருளா லதிகரித்து
மெய்ப்போத நெறிவந்த விதிமுறைமை வழுவாமே
அப்போதைக் கப்போது மார்வமிகு மன்பினராய்
முப்போது மருச்சிப்பார் முதற்சைவ ராமுனிவர்“
என்றும்,

“...........வழிவழியே திருத்தொண்டின்
விரும்பியவர்ச் சனைகள்சிவ வேதியர்க்கே யுரியன........“

என்றும், முப்போதுந் திருமேனிதீண்டுவார் புராணத்திலேயும் கூறியவாற்றால்
பிரமதேவர் முகத்திலிருந்து தோன்றிய ஏனை வேதியர்போலல்லாமல்
இவர்கள் சிவபெருமானது ஐந்துதிருமுகங்களினின்றும் அதிகரித்து
வந்தமையும், ஆகமங்களின் வழியே சிவபெருமானை அருச்சிக்க உள்ள
இவர்களதுரிமையும், பிறவும் விளங்கும். மகா சைவராகிய ஏனைய
வேதியரிடமிருந்து பிரித்து உணர்தற்