பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு33

Periya Puranam

     முடிமேல் அடிவைத்தவன் - திருவடி தீக்கை செய்தவர்; இது சிவ
தீக்கை வகையுள் ஒன்று; கண்ணணுக்கு உபமன்னிய முனிவர் சிவதீக்கை
செய்த வரலாறு மாபாரதத்திலே ஆனுசாசன பருவத்திலே கிருட்டினனுக்குச்
சிவதீட்சை செய்த பகுதியுட் காண்க. கண்ணன் யமுனை யாற்றுக்கரையிலே
சிவதீக்கையில்லாது வைதிக மார்க்கத்தாலே சிவபூசை செய்தனன். அவன்
பூசித்த பின் அந்த மலர்களை யமுனை யாற்றிலே இட்டார்களாக, அவை
யமுனையின் வழிப்பட்டுச் சென்றன. அவற்றை உபமன்னிய முனிவர் எடுத்துச்
சிவபூசை செய்ய, அவை கண்ணன் பூசித்த நின்மாலியம் என்று கேட்டபோது
“அவனுக்குச் சிவ தீக்கையில்லை ஆதலின் அவன் பூசித்த பூக்களுக்கு
நின்மாலிய தோடமில்லை; அவை நின்மாலியமாகா;” என்ற சொல்லிப் பூசித்து
முடித்தனர். அதுகேட்ட கண்ணன் தான் இதுகாறும் செய்த சிவபூசை
பயனற்றுப் போனதை எண்ணிவருந்தி அம்முனிவரை யடைந்து சிவதீக்கை
செய்து கொண்டனன் - என்பது அதன் சுருக்க வரலாறு.

     தொண்டினுக்கு ஆதியந்த மிலாமை யடைந்தவன் : இவர்
சிவபெருமானுக்குச் செய்யுந் தொண்டு - இங்கே தொடங்குகின்றது, இங்கே
முடிகின்றது - என்று சொல்ல இயலாதபடி எங்கும் என்றும் இடைவிடாது
மனம் வாக்குக் காயங்களினாலே செய்ய நிலைத்து நிற்கும் பேற்றை
அடைந்தவர். இனித், தொண்டினுக்கு ஆதி : (தலைவர்); அந்தம் (இறப்பு)
இலாமை அடைந்தவர் எனப் பிரித்துரைத்தலுமாம்.

     கண்ணன் உபமன்னிய முனிவன்பாற் சிவதீக்கை பெற்றுத் தன்னையுந்
தலைவனையு முணர்ந்தோனாதல் சிவோகம் பாவனை கைவந்தோனாதல்
அறிக என்று இவ்வரலாறு பற்றி எமது மாதவச் சிவஞான முனிவர்
சிவஞானபோதச் சிற்றுரையில் விரித்தருளுதல் காண்க. 14

25. அத்தர் தந்த வருட்பாற் கடலுண்டு
 
  சித்த மார்ந்து தெவிட்டி வளர்ந்தவன்;
பத்த ராய முனிவர்பல் லாயிரர்
சுத்த யோகிகள் சூழ விருந்துழி,
15

     (இ-ள்.) அத்தர் ... உண்டு - அத்தர் அருளினாற் கொடுத்த திருப்பாற்
கடலைப் பருகி; சித்தம் ... வளர்ந்தவன - மனம் நிறைவுபெற்றுத் தேக்கி
அதுவே உருவமாய் வளர்ந்தவர்; பத்தர் ... இருந்து உழி - பத்தர்களாக
உள்ள முனிவர்கள் பல ஆயிரவர்கள் சுத்தாவத்தையிற் சிவத்தைச் சார்ந்த
யோகிகள் என்ற இவர்கள் தம்மைச் சூழ்ந்து கொண்டிருக்க
அமர்ந்திருந்தபோது.

     (வி-ரை.) இப்பாட்டு முதல் 11 பாட்டுக்கள் குளகம். வரும் பாட்டிலே
தோன்றிட என்பதுடன் கூட்டி இருந்துழித் தோன்றிட எனக் கூட்டி மேலும்
முடித்துரைத்துக் கொள்க.

     அத்தர் தந்த அருட்பாற்கடலுண்டு ... வளர்ந்தவன் - உபமன்னிய
முனிவர் குழந்தைப் பருவத்திலே பால்வேண்டியழுக, இறைவர்
திருப்பாற்கடலையே அக்குழந்தைக்கு உண்ணக் கொடுத்தருளினார் என்பது
வரலாறு. இதனைச் சிவரகசியம், கோயிற் புராணம் முதலியவற்றிற் காண்க.
“பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈந்த பிரான்” என்பது
திருப்பல்லாண்டு.

     அருட் பாற்கடல - அருளினாலே அத்தர் தந்த பாற்கடல் எனக்
கூட்டுக. அத்தர் - தந்தை; இங்கு யாவர்க்கும் தந்தையாகிய
சிவபெருமானைக் குறித்தது.

     முனிவர் - மனனசீலர்; பத்தராய முனிவர் - முனிவர்களாகிய
அத்தன்மையோடு இறைவனிடத்தே பதிந்த பத்தியையும் வாய்ந்தவர்.
முனிவர்களாகியும் பத்தியில் வராத தாருகவனத்து முனிவர் போன்றோரை
வேறு பிரித்தற்பொருட்டுப் பத்தராய என்றார். இது பிறிதினியைபு நீக்கிய
விசேடணம்.