பக்கம் எண் :


திருமலைச்சிறப்பு37

Periya Puranam
28. கைகள் கூப்பித் தொழுதெழுந் தத்திசை
 
  மெய்யி லானந்த வாரி விரவிடச்
செய்ய நீள்சடை மாமுனி செல்வுழி
ஐய நீங்க வினவுவோ ரந்தணர்,
18

     (இ-ள்.) கைகள் ... எழுந்து - (முனிவர் உணர்ந்து) கைகளைச்
சிரமேற்குவித்துத் தொழுதுகொண்டே எழுந்தனராகி; அத்திசை ...... செல்வழி
- பேரொளி தோன்றிய அத்தென்றிசையை நோக்கித் தமது மேனி முழுதும்
ஆனந்தவெள்ளம் பெருகச் சிவந்த நீண்ட சடையையுடைய உபமன்னிய
முனிவர் சென்றனர்; அவர் அவ்வாறு செல்லும்பொழுது; ஐயம் ... அந்தணர்
- அதனால் தமக்குள் எழுந்த ஐயம் நீங்கும்படிச் சூழ இருந்த மாதவர்கள்
பின்வருமாறு வினாவுவாராயினர்.

     (வி-ரை.) தொழுதெழுந்து - “தொழுதெழுவாள” என்ற குறளிற்போல;
அத்திசை நோக்கித் தொழுதுகொண்டே எழுந்து - என்றபடி.

     அத்திசை - தென்றிசை.

     மெய்யில் ஆனந்தவாரி விரவிட - மேனி முழுவதும் ஆனந்தக்
கண்ணீர் பெருக; மனத்துள்ளே உணர்ந்த அவ்வுணர்ச்சி ஆனந்தத்தை
விளைத்தது. “அன்பிற்கு முண்டோ வடைக்குந் தாழ” (குறள்.)
ஆனந்தவாரி அன்பைக் காட்டும் அனுமான அடையாளம் கைகள் கூப்பித்
தொழுது அத்திசை முனிசெல்வுழி என்று கூட்டுக. எதிர்கொண்டு சென்றார்
என்க.

     செய்ய - சிவந்த. ஐயம் - வரும் பாட்டிற் காண்க.

     அந்தணர் - மாதவர். “அந்தணர் என்போர் அறவோர்” என்பது திருகுறட் பிரமாணமாம். 18

29. “சம்பு வின்னடித் தாமரைப் போதலால்
 
  எம்பி ரானிறைஞ் சாயிஃ தென்?” னெனத்
“தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன்
நம்பி யாரூர னாந்தொழுந் தன்மையான்”,
19

     (இ-ள்.)சம்புவின் ... என்?” என் - எமது தலைவரே!
சிவபெருமானது திருவடிகளைத் தவிர வேறு எதனையும் பணியாத
இயல்புடையீர்; இப்போது இந்தச் சோதியைத் தொழுது எழுந்து திசைநோக்கிச்
செல்லும் காரணம் என்ன? என்று மாதவர்கள் கேட்க;“தம்பிரானை ...
தன்மையான்
- இங்கு வருகின்றவர் தம்பிரானாகிய சிவபெருமானையே தமது
உள்ள முழுதும் தழுவிக் கொண்டுள்ளவர்; அவர் நம்பி ஆருரர் என்னும்
பேருடையவர்; அவர் நம்மாற் றொழப்படும் தன்மையுடையவர்.” (என்று கூற
- எனவரும் பாட்டுடன் தொடர்ந்து கொள்க.)

     (வி-ரை.) சம்பு - சுகத்தை உண்டுபண்ணுபவன், சிவபெருமான்.
உயிர்கள் துக்க முற்றவர்; துக்கம் போக்கிச் சுகத்தை உண்டுபண்ணுவதால்
இவனை அடைகிறார்கள். “வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி
வேதனைக்கும், அஞ்சி யுனையடைந்தே னையா பராபரமே” என்பது
தாயுமானவர் திருவாக்கு.

     சம்பு இன் அடித்தாமரைப் போது - சிவபெருமானது இனிய தாமரை
மலர் போன்ற திருவடி. இன் அடி - இனிய திருவடி. அடித்தாமரைப்போது
என்பதைப் போது போன்ற அடி என்று மாற்றியுரைத்துக் கொள்க.

     இது என்? - சம்புவின் திருவடியே யன்றி வேறொன்றையும் வணங்காத
தலைவராகிய தேவரீர் இப்போது இச்சோதியை நோக்கிக் கைகூப்பித்தொழுது
செல்லும் இது என்ன?

     தம்பிரான் - முழுமுதற் கடவுள்.