பக்கம் எண் :


630 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam

நின்ற பெரும் பேறு பெற்றார்; மற்றும் பெற நின்றார்“ (497) என்பன
காண்க. இத்தொண்டினை இறைவ னருளாலே தாம் பெற்றவர்.
“அவனருளாலே அவன்றாள் வணங்கி“ என்பது திருவாசகம்.

     தக்க வகை - இவர் செய்து வந்த திருத்தொண்டினுக்கு பொருந்திய
வகை. தகுதியாவது சரியையாதி வழிகளிற் றொண்டு செய்வோர்க்கு உரிய
சாலோக முதலியனவாகச் சாத்திரங்களிற் கூறிய வகை.

     அருளினாலே தன்மை பெற்று
- அருளாலே தொண்டு பெற்ற
அதனால் அவ்வருளினாலே இறுதியில் இத்தன்மை பெற்று. மிக்க -
மேன்மையான. கணநாயகர் - சிவகணங்களின் தலைவர். தொண்டர்களின்
நெறி போற்றி இங்குத் தலைமை பெற்ற தொண்டினுக் கேற்க அங்கும்
கணநாயகராயினர் என்பது. “தூநறுங் கொன்றை முடியவர் சுடர்நெடுங்
கயிலைமால் வரையெய்தி, மான நற்பெருங் கணங்கட்கு நாதராம்
வழித்தொண்டி னிலைபெற்றார்“ (6) என்ற கணநாத நாயனா புராண
உள்ளுறையுங் காண்க.

     தாள் நிழல் - 489 பார்க்க. 10

501. வேறு பிறிதென்? றிருத்தொண்டத் தொகையா
                       லுலகு விளங்கவரும்
 
  பேறு தனக்குக் காரணராம் பிரானார் விறன்மிண்
                           ரைப்பெருமை
கூறு மளவென் னளவிற்றே?, யவர்தாள் சென்னி
                          மேற்கொண்டே
யாறை வணிக ரமர்நீதி யன்பர் செய்கை
                            யறைகுவாம்.
11

     (இ-ள்.) வெளிப்படை. பல வேறு மற்றும் சொல்லிக் கொண்டிருக்க
வேண்டியதென்னை?; திருத்தொண்டத்தொகை கிடைக்கப் பெற்ற அதனாலே
உலகம் விளங்கவரும் பெரும் பேற்றினுக்குக் காரணராகும் தலைவராகிய
விறன் மிண்ட நாயனாரின் பெருமையை எடுத்துச் சொல்லும் அளவு என்
அளவுக்குள் அமையுமோ? அவர் திருவடியைத் தலைமேற் சூடிக்கொண்டே
அத்துணைகொண்டு, பழையாறை வணிகராகிய அமர்நீதி நாயனாரது
திருத்தொண்டின் பண்பும் வரலாறுங் கூறுவோம்.

     (வி-ரை.) இது ஆசிரியர் கூற்று. இப்புராணத்தை முடித்துக் காட்டி,
மேல்வரும் புராணத்திற்குத் தோற்றுவாய் செய்தவாறு.

     திருத்தொண்டத் தொகை .......... பெருமை
- இந் நாயனாரின்
சரிதத்தையும் அதன் உள்ளுறையையும் வடித்து எடுத்து முடித்துக் காட்டியபடி.

     தொகையால் உலகு விளங்க வரும் பேறு-“ஞாலமுய்ய“ (499)
என்ற இடத்துக் காண்க. “ஈசனடியார் பெருமையினை யெல்லா வுயிருந்
தொழவெடுத்துத், தேசமுய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த
திருவாளன்“ (சண்டீசர் புரா - 60) என்றதும் காண்க. 35 - உரை பார்க்க.

     காரணர் - நம்பிகள் பாடுதற்குத் துணைக் காரணராயிருத்தவர்.

     கூறும் அளவு என் அளவிற்றே? - சொல்கின்ற சொல்லாற்றலின்
அளவு எனது ஆற்றலுட்பட அமையுமோ? அமையாது. ஏகாரம் வினா
எதிர்மறைப் பொருள் குறித்தது. “இனி யார் பெருமை கூறுவார்“. (498),
பெருமை யறிந்தாரார்“ - (499) என முன்னருங் கூறினார்.
இப்புராணத்திற்கு முதனுலாயுள்ள திருத்தொண்டத் தொகைக்குக் காரணராகிய
சிறப்புப்பற்றி விளக்கம் பெறப் பின்னரும் அதனையே எடுத்துக் காட்டி
முடித்தவாறு. 490 உரை பார்க்க.

     ஆறை - பழையாறை என்றது முதல் குறைந்து ஆறை என நின்றது.
ஆறைவடதளி, ஆறை மேற்றளி என்ற வழக்குக்களும் காண்க. வணிகர் -
அன்பர்
- வணிகர் குலத்தினராகிய அன்பர். அமர்நீதி - நாயனாரது பெயர்.11