பக்கம் எண் :


அமர்நீதி நாயனார் புராணம்649

Periya Puranam
     515. (வி-ரை.) கோவணத்தின் ஓங்கு பெருமையை என மாற்றுக.
ஓங்குதல்
- பிறவற்றை யெல்லாந் தாழச்செய்து தான் மேலோங்கிப் புகழால்
மிகுதல். “புவனம் யாவையு நேர்நிலா வென்பது புகழோ?“ (540) என்று
இதனையே பின்னர் விரித்தனர்

     ஓங்கு கோவணம் என்று கொண்டு, கோவணம் வேதம்; வேதம் நாத
உருவமாய் மேலோங்கி நின்று ஏனைய வெல்லாம் தன்னினின்று பிறக்க
நிற்பது என்று உரைப்பினு மமையும். “மன்னுதலை துன்னு பொருள்
மறைநான்கே வான்சரடாத், தன்னையே கோவணமாய்ச் சாத்தினன்காண்
சாழலோ“ என்ற திருவாசகத்திற் கோவணப் பெருமையை விரித்தவாறு
காண்க. “அருமறைநூற் கோவணத்தின்“ (மானக்கஞ்சாறர் புராணம் - 24),
“மறையே நமது கோவணமாம்“ (திருவிளையாடற் புராணம்) என்பன காண்க.

     ஈங்கு நான் சொல்ல வேண்டியதில்லை
- நீர் கோவணப்
பெருமையை அறிந்து அடியார்க் களித்துவருகின்றீராதலின் நான் சொல்லித்
தெரியவேண்டுவதில்லை. ஈங்கு இவ்விடத்தில். இப்போது என்றலுமாம்.

     இப்பெருமையைப் பின்னர் நான் சொல்லாமல் நீரே அறிந்து
கொள்ளுவீர் என்பதும் குறிப்பு.

     வரும் அளவும் - நீராடித் திரும்பி வரும் வரையிலும்.

     இகழாதே - உம்மிடத்தில் உள்ள அளவற்ற கோவணங்களைப்
போன்றதே யிதுவுமாம் என்று இகழ்ச்சியாகக் காணாது காவல் செய்து.

     ஆங்கு - காவலுள்ள தனியிடத்தில். சுட்டுச் சிறப்புக் குறித்தது.

     நீர் வாங்கி.....வைத்து.....நீர்தாரும் என, நீர் என்றதனை
இருமுறையும் வைத்த தென்னை? எனின், வாங்குதலும் வைத்தலும் நீர்
செய்வீர். நான் வாங்குகின்றேன், நான் வைக்கின்றேன் என்ற ஆன்ம
போதத்துடன் செய்யும் செயல் நீர் செய்வீர். ஆனால் பின்னர்
அக்கோவணத்தைத் திருப்பித் தருகின்ற செயல் உம்முடைய செயலாக நீர்
செய்யப் போவதில்லை. தற்போத மிழந்த நிலையில் உம்மையே நீர் தந்து
கோவணத்துக்கு நேர் கண்டுகொள்ளுவீர் என்பது குறிப்புமாம். நீர் - வாங்கி
வைத்து,
என்றது உயிரின் தற்போத நிலை. “யாவையும் வைச்சு வாங்குவாய்“
- திருவாசகம். “எல்லாந் தான்வைத்து வாங்க வல்லான்“ (379) என்றபடி
வைத்தலும் வாங்குதலும் என்ற தொழில். ஆனால் நீர் வாங்குவதாயும்
வைப்பதாயும் எண்ணி வாங்கி வைக்கின்றீர் என்ற குறிப்புமாம். வைத்தல் -
வாங்குதல் என்ற சொல்லாட்சிகள் காண்க. வைத்தல் - சிருட்டி; வாங்குதல்
- ஒடுக்கம். இங்கு வாங்கி - வைத்து - தாரும் என்றது கோவணத்தின்
மறைவினையும், பின்னர் நாயனார் இறைவனில் ஒடுங்குவதனையும் குறித்து
நின்றன என்பர்.

     நீர்தாரும் - என்றது பரவசமாகித் தற்போதமிழந்து சிவம் விளங்கிய
நிலை. “இருதிறன் அறிவுள திரண்டலா வான்மா“ என்பது சாத்திரம். வாங்கி
- வைத்து
என்ற வினைகளுக்கு எழுவாயாய் நின்ற நீர் என்றதின் தன்மை
வேறு; தாரும் - என்ற வினைக்கு எழுவாயாய் நிற்கும் நீர் என்றதின்
தன்மை வேறு. ஆதலின் உயிர் ஒன்றேயாகவும், சார்புபற்றித் தன்மை
வேறுபாடு நோக்கி இருமுறை கூறினார் என்க. “இப்பி றப்பினி லிணைமலர்
கொய்துநா னியல்பொடு மஞ்செழுத் தோதித், தப்பி லாதுபொற் கழல்களுக்
கிடாதுநான் றடமுலை யார்தங்கண், மைப்பு லாங்கண்ணா லேறுண்டு
கிடப்பேனை“ என்ற திருவாசகத்தில் நான் என்றது இருமுறையும் ஆளப்
பெற்றது காண்க.

     சொல்ல வேண்டுவதில்லை - இதனை வாங்கி வைத்துத் தாரும்
என்றது இதன் பெருமை ஒருபுறமிருக்க, ஒப்புவித்த பொருள் பெரிதேயாக,
அன்றிச், சிறியதேயாக, அதனைக் காப்பாற்றித் திருப்பித் தருதல் உமது
கடமை என்பதும் குறிப்பாம். 14