பக்கம் எண் :


1300 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     நீடும் களிறு - முன்னர்க் கண்கட்டி விடப்பட்டபோது திருவருள்
வசமாகித் தம்மை எடுத்துப் பிடரியில் கொண்ட என்று குறிக்க நீடு என்றார்.

     நீள் மறுகு - ஆலவாய்க்கடவுள் பல அருட் டிருவிளையாடல்கள்
செய்த அருளினால் நீளும் திருவீதிகள். இந்நாளிலும் அவை அவ்வருட்டிரு
விளையாடல்களையே (ஆவணி மூல வீதி முதலிய) தத்தம் பெயர்களால்
நினைவூட்டி நிற்பதும் கண்கூடு.

     மௌலியணிந்தவர் என்ற எழுவாய் வினைப்பெயர். 43

     1011. (வி-ரை.) மணிமாளிகை - அரசரது அரண்மனை. தயங்கும்
மணிமண்டபம்
- அதனுள் கொலு வீற்றிருக்கும் மண்டபம்.

     பொன்னின் அரி மெல் அணை - பொன்னாற் புனையப்பட்டுச்
சிங்கம் சுமந்தது போல அமைக்கப்பட்டிருக்கும் அரச இருக்கை. மென்மை -
பஞ்சு, தூவி முதலியவற்றை உள்ளே இட்டு, வீற்றிருக்க மெல்லியதாய்ப், பட்டு
முதலியவற்றால் அமைக்கப்படுதல் குறித்தது. Soft cushion என்பர் நவீனர்.

     சாமரைப்பூங்கால் - சாமரைகளை இருபுறமும் மெல்ல வீசுதலால்
உளதாகும் மென்மையாக அசையும் காற்று. காமர் - சாமரைகளின் அழகு -
வரிசையின் ஒழுங்கு - இவற்றையும், பூ - காற்றின் மென்மையினையும்
குறித்தன. நவீனர், மேல் விசிறி (Punka) வீச அதன்கீழ் வீற்றிருக்கும் இயல்பு
காண்க.

     மன்னும் குடைநீழல் - உலகம் தன் கீழ்த்தங்கும் அரச ஆணைக்கு
அடையாளமாகிய வெண்குடையின் நீழலிலே. நீழல் - உபசாரம்.
"வெண்கொற்றக் குடையும், நவமணி முடியும், சிங்காதனமும்,
மன்னவர்க்கேயுரிய சிறப்படையாளமாம்" (சிவஞா - போ - 8-ம் சூ. சிற்றுரை)
என்றது காண்க.

     வையந் தாங்கி இருந்தனர் என்க. தாங்குதல் உபசார வழக்கு.
அரசாளுதல் குறித்தது. "வையம் முறை செய்குவனாகில்" (1008).

     அணை - நீழல் - ஏழனுருபுகள் தொக்கன.

     அணிந்தவர் - சென்று - தாழ்ந்து - போந்தாராகி - இழிந்து - நீழல் -
இருந்தனர் என்று இந்த இரண்டு பாட்டுக்களும் கூட்டி முடித்துக்கொள்க. 44

1012. குலவுந்துறை நீதி யமைச்சர் குறிப்பின் வைகக்,
கலகஞ்செய மண்செய லாயின கட்டு நீங்கி
நிலவுந்திரு நீற்றுநெ றித்துறை நீடு வாழ,
உலகெங்குநி ரம்பிய சைவமு யர்ந்து மன்ன,
45
1013. நுதலின்கண்வி ழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
பதமெங்குநி றைந்து விளங்கப் பவங்கண் மாற
வுதவுந்திரு நீ,றுயர் கண்டிகை, கொண்ட வேணி
முதன்மும்மையி னாலுல காண்டனர் மூர்த்தி யார்தாம்.
46

     1012. (இ-ள்.) வெளிப்படை. குலவுகின்ற பல துறைகளிலும்
நீதிநடத்தும் அமைச்சர்கள் தமதுகுறிப்பின்படி நிற்கவும், கலகம்செய்த
அமணர் செயலாயின கட்டு நீங்கி நிலவுகின்ற திருநீற்று நெறியும் துறையும்
நீடுவாழவும், உலகமெங்கும் நிரம்பிய தன்மையுடைய சைவம் ஓங்கி
நிலைபெறவும், 45

     1013. (இ-ள்.) வெளிப்படை. நெற்றியின் கண் விழியுடையவராகிய
சிவபெருமானது வாய்மையாகிய நுண்பொருள் கொண்ட நூலின் பொருள்
எங்கும் நிறைந்து விளங்கவும், பவங்கள் மாறவும் உதவுகின்ற திருநீறும்,
உயர் உருத்திராக்கக்