பக்கம் எண் :


முருகநாயனார்புராணம்1327

 

இவ்வாறு நிலவு என்றார். முறுவல்நிலவு அலா நாண் பூட்டும் என்க.
முறுவல் அலரும்படி வில்லில் நாண் பூட்டியது என்றது, நாண் பூட்டியமட்டில்
அமைந்து நிற்க, அது செய்யவேண்டிய காரியத்தை முறுவல் முடித்தது என்ற
சரிதத்தை அணிபெறக் கூறியபடியாம்.

     கனகவரை - பொன்மலை - மகாமேரு. பன்னகநாண் பூட்டும் -
திரிபுரமெரித்த காலத்தில் ஆதிசேடனை மேருவில்லிற்கு நாணாகக்கொண்ட
புராணசரிதம் குறித்தது.

     தெரிந்து - கொண்டுவந்து - இருந்து - சமைத்துச் சாத்துவார் -
அமைத்துச் - சென்று - சாத்திப் - புரிந்து - பரிந்துள்ளார் - என வரும்
பாட்டுக்களுடன் கூட்டி முடித்துக் கொள்க. 8

     1025. (வி-ரை.) தனியிடத்தில் - திருப்பூமண்டபத்தில். பூக்களைக்
கொண்டு வந்து சேர்த்து மாலை தொடுத்தற்கென்று தூயதான குளிர்ந்த
தனியிடம் இருத்தல் வேண்டும். இதன் அமைதிபற்றி ஏயர்கோன் - புரா -
225 - 226 பாட்டுக்களிலும், பிறாண்டும் பார்க்க. அசுத்தம் முதலியன
தொடக்காமலும், வெயில் காற்று முதலியவை தாக்காமலும் இருக்கத்
தனியிடம் அமைத்தல் மரபு.

     கோக்கும் கோவை - கோக்கப்படுதலால் கோவை எனப்
பெயராயிற்று. இண்டை- மாலைவகை. இது பெரும்பாலும் தலையில்
அணிவது. கண்ணி - கொண்டை மாலை. தாளிற் பிணைக்கும்- மலர்களை
அடியோடு சேர்த்துக் கட்டுதல் என்பர். பிணையல் - பிணைக்கப்படுதலாற்
போந்தபெயர். தொடுக்கப்படுவது தொடையல். இவை மாலை வகைகள்.

     நுண்தாது இறைக்கும் - நுண்ணிய பூந்தாதுக்கள் வீழ்கின்ற. புதிதின்
மலர்ந்த பருவமாதலின் பூக்களினின்றும் மகரந்தங்கள் சிந்துவன.

     சமைத்தல் - மேற்கூறிய மாலை வகைகளாக ஆக்குதல். வெவ்வேறு
மாலை வகைகளைப்பற்றி 164 - பார்க்க.

     நுடங்கு நூல் - தோளிற்கிடந்து கீழே மார்பில் அசையும் பூனூல்.

     சுருதிகளிற் கூறப்படும் "பிரஞானம் பிரமம்", "அகம்பிரம்மாஸ்மி",
"தத்துவமசி", "அயமாத்மா பிரமம்" என்ற நான்கு மகா வாக்கியங்களை
நால்வகை மலர்களாகத் தெரிந்து எடுத்தனர் என்றும், அச்சுருதிப்
பொருள்களை ஆறங்கங்கள் விளக்குவனவாதலின் அவற்றை ஆறுவகை
மாலைகளாக்கிச் சடத்துவ சோதனைக்குரிய ஆறுகாலங்களினும் சாத்தினர்
என்றும், ஆறுகாலங்களாவன : உஷத்காலம் - திரோபவத்தினால்
உயிர்களை இருளினின்றும் வெளிப்படுத்தும் காலம்; உதயகாலம் -
உயிர்களுக்கு இருவினைத் தொழில்களைக்காட்டி அவைகளில் விடுங்காலம்;
உச்சிக்காலம் - அவற்றாலாகிய பொருள்களை நுகர்விக்குங்காலம்;
பிரதோடகாலம் - அனுபவத்தில் செல்லானவைபோக மிகுதியைக் கணித்து
வைக்குங்காலம்; சாயங்காலம் - கணித்து வைத்தவற்றை நீக்குங்காலம்;
அர்த்தயாமம் - தன்வசப்பட்டுச் செயலற்றிருக்குங்காலம் என்றும் இங்கு
விசேடவுரை காண்பர் ஆலாலசுந்தரம் பிள்ளை.

     இறைக்குந் தொங்கல்களும் - என்பதும் பாடம். 9

     1026. (வி-ரை.) அப்பணிகள் - அலங்காரத்துக்குரிய அந்த மாலை
வகைகள். அமைத்த காலங்கள் - அவ்வவற்றுக் குரியனவாய் விதிக்கப்பட்ட
காலங்கள. இவற்றை வைகறை, எற்பாடு, நண்பகல், மாலை, யாமம் என்ற
சிறுபொழுது ஐந்து என்பது தமிழ் மரபு. எற்பாடு - உதயகாலம்; வைகறை -
உதயத்துக்கு முன் ஐந்து நாழிகை. சிறுபொழுது ஆறு என்பாரு முண்டு.

     அமைத்த காலம் - உரியனவாய் விதிக்கப்பட்ட காலம். அமைத்து -
மாலை வகைகளில் ஏற்றவற்றைக் கட்டி, அமைத்தல் - கட்டுதல்.
முன்பாட்டில் சமைத்து