பக்கம் எண் :


ஏனாதிநாயனார்புராணம்779

 
மேனாளுந் தான்குறைந்து மற்றவர்க்கே மேம்படலா
லேனாதி நாதர்திறத் தேலா விகல்புரிந்தான்.      7

     (இ-ள்.) வெளிப்படை. தனது தொழின்முறை குறைவுபடத் தங்கள்,
குலத்திற்குரிமையாகிய தாய உரிமையிற் குறையாத செய்தொழிலாகிய
வாட்படை பயிற்றும் ஆசிரியத் தொழிலான்வரும் ஊதியமானவை மேன்மேல்
நாளும் தனக்குக் குறைந்து மற்ற அவருக்கே மேம்பட்டு வருதலாலே ஏனாதி
நாதர் திறத்திலே பொருந்தாத பகைமை பாராட்டுவானாயினான்.

     (வி-ரை.) விருத்தி - பிழைக்கும் வழி. சீவனோபாயம் என்பது
வடமொழி வழக்கு. கெட - சீவனோபாயம் கெடுதலால். கெட (அதனால்)
குறைந்து எனக் கூட்டுக.

     குலத்தாயத்தின்......வளம் - தமது அந்தக் குலத்தினுள்ளார்
அனைவர்க்கும் தாயபாக உரிமையின்படி பொருந்தியதாகிய. தாயாதி
பாத்தியப்பட்ட என்பது இந்நாள் வழக்கு. ஆனாத செய் தொழில் -
அரசர்க்குப் படைபயிற்றும் தொழிலாதலின் குறைவு படாத
செய்தொழிலாயிற்று. ஆசிரியத் தன்மை - படை பயிற்றுவிக்கும்
உபாத்திமை. வளம் - அதனாற் பெறும் பலவகை ஊதியங்களின் பெருமை
குறித்தது. 611 பார்க்க.

     மேல் நாளும் - மேல் - எதிர்காலத்திலே வரவர. நாளும் -
நாணாளும் - படிப்படியாக. மற்றவர்க்கே - இவனின் வேறாகிய அவருக்கு.
ஏகாரம் பிரிநிலை.

     மேம்படல் - இவனுக்குமேல் நாளும் குறைந்தது போல, அவ்வளவிற்கு
அவர்க்கு மேம்பட்டது என்க.

     ஏனாதிநாதர் திறத்து - ஏனாதிநாதர்பால். அவரிடத்திலே என்க.
திறம்
- பகுதியுமாம். திறத்து - பகுதியிலே பக்கத்திலே.

     திறத்து - அவரது திறத்தின்கண் என்றுரைத்தலுமாம். திறமாவது
படைபயிற்றுந் தொழில், விஞ்சையிற் றலைமை சார்ந்தமை, அதனால்
வளம்பெற வாழ்தல், நள்ளார்களும் போற்றும் நன்மைத் துறையினிற்றல்,
வளத்தின் மேம்படல் முதலியன.

     ஏலாஇகல் - ஏலா - அவர்மாட்டுப் பொருந்தத் தகாத. பொறாமை
காரணமாக எழுந்ததாகலின் ஏலாததாயிற்று. அவர் முன்னிலையில் தன் குறை
அறிந்து திருத்திக் கொள்ள முயலாமற் பொறாமை கொண்டான். "தம்மினுங் -
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றவெலா, மெற்றே யிவர்க்கு நாமென்று"
என்று நீதிநூல்விதிப்பவும் அவ்வாறு ஒழுகாது அழுக்காறு கொண்டதனால்
அது அவாவை விளைத்தது; அது வெகுளியையும், அது இன்னாச்
சொல்லையும் முறையே உண்டாக்கின. இதனால் அறந் தேய்ந்தது; மறம்
வளர்ந்தது; அதனாற் பொருள் தேய்ந்தது; என முறையிற் கண்டு கொள்க.
"அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவ, டவ்வையைக் காட்டி விடும்"
என்பது திருக்குறள்.

     இகல் - பகைத் தன்மை. புரிந்தான் - பலகாலமும் மனத்தில்
வைத்துச் சிந்தித்தான். "திருச்செற்றுத் தீயுழி யுய்த்து விடும்" என்றபடி இகல்
புரிந்தான் என்க. "அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொல்" என்றபடி இவை
முறையின் விளைக்கும் மேல்விளைவை மேலிரண்டு பாட்டானுங் கூறுகின்றார்.
முள்கின்ற செற்றம் - (616) என்றதுங் காண்க. 7

615.

கதிரோ னெழமழுங்கிக் கால்சாயுங் காலை
மதிபோ லழிந்துபொறா மற்றவனுஞ் சுற்றப்
பதியோ ருடன்கூடப் பண்ணி யமர்மேற்சென்
றெதிர்போர் விளைப்பதற்கே யெண்ணித்
                      துணிந்தெழுந்தான்.
 8

     (இ-ள்.) வெளிப்படை. ஞாயிறு மேலே வரவரத் தன் ஒளி குறைந்து
மங்குகின்ற காலைநிலாப் போலக் குறைவடைந்து பொறாமை மேற்கொண்ட